ராஜ்யசபா சீட்: அதிமுக வாக்குறுதியால் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை.. எல்கே சுதீஷ் புலம்பல்!
சென்னை: அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தரும் என வாக்குறுதி அளித்தது; அதிமுகவின் வாக்குறுதியை நம்பித்தான் 2024 லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என தேமுதிகவின் பொருளாளர் எல்கே சுதிஷ் விளக்கம் அளித்துள்ளார்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த முக்கிய கட்சி தேமுதிகதான். அதிமுக- தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் எனவும் பிரேமலதா அறிவித்தார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக நாங்கள் உறுதி அளிக்கவே இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். இதனால் தேமுதிகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக இடம் பெறும் அணியில் தேமுதிக இடம் பெறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், 2024 லோக்சபா தேர்தலின் போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தரப்படும் என அதிமுக உறுதி அளித்தது உண்மைதான். அதனை நம்பித்தான் 2024 லோக்சபா தேர்தலில் நான் தேர்தலிலேயே போட்டியிடாமல் இருந்தேன். தற்போது அதிமுக, அதனை மறுத்து வருகிறது. உரிய நேரம் வரும் போது அனைத்து உண்மைகளையும் பகிரங்கப்படுத்துவோம். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றார்.
தேமுதிகவைப் பொறுத்தவரையில் எப்படியாவது ஒரு ராஜ்யசபா சீட் பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்பது நீண்டகால கனவு. இதனால் எந்த கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதை இடைவிடாமல் பேரமாகவே முன்வைத்து வருகிறது தேமுதிக. அக்கட்சியில் பிரேமலதா விஜயகாந்த், பொதுச்செயலாளர்; அவரது சகோதரர் எல்கே சுதீஷ், தேமுதிக பொருளாளர்; அவரது மகன் விஜய பிரபாகரன், தேமுதிக இளைஞரணி செயலாளர். இதனால் மாநில அரசியலுக்கு மகனையும் டெல்லி அரசியலுக்கு தம்பியையும் அனுப்பி வைப்பது பிரேமலதாவின் திட்டம். ஆனால் எந்த கட்சியும் கூட்டணிக்கே கூப்பிடாத நிலையில் ராஜ்யசபா சீட் எப்படி கிடைக்கும்? என்பதால்தான் இந்த புலம்பல் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications