2 அமைச்சர்கள் என்னை துணைமுதல்வராக வலியுறுத்தினர்.. ரகசியத்தை வெளியிட்ட தினகரன்!
சசிகலா சிறை செல்லும் முன்னர் என்னை துணை பொதுச்செயலாளராக நியமிக்கச் சொன்னது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி தான் என்று டிடிவி. தினகரன் உண்மைகளை போட்டு உடைத்துள்ளார்.
திருப்பூர் : சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற போது என்னை துணை பொதுச்செயலாளராகவும், துணை முதல்வராகவும் நியமிக்கச் சொன்னது இதே முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி தான் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : கூவத்தூரில் எம்எல்ஏக்கள் இருந்த போது முதல்வராக பழனிசாமியை நியமித்த போது, அவர் அனைவரிடமும் கையெழுத்து வாங்கச் சொன்னார். ஆனால் சசிகலா கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு அனைத்து எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் அதற்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் திடீரென ஏதோ ஒரு பயத்தில் பின்வாங்குகிறார்கள். சசிகலா சிறை சென்ற போது முதல்வர் பழனிசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் தான் என்னை துணை பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்கும் கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்கச் சென்ற போது இதே தங்கமணியும், வேலுமணியும் என்னை துணை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

பதவியாசை இல்லை
பதவிக்கு நான் ஆசைப்படுவதாக இருந்தால் நானே முதல்வராகியிருப்பேன். ஆனால் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் விரும்பினோம்.

துணை முதல்வராக்கச் சொன்னது யார்?
அமைச்சரவை அமைக்கும் போது நான் துணை முதல்வராக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று சொன்னவர்கள் இவர்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் வாக்கு சேகரிக்க சென்ற போது எனக்கு அருகில் நின்று வாக்கு கேட்டவர்கள் இவர்கள்.

சுயநலம்
நான் வீரத்தோடு அதே நேரம் அமைதியாக இருப்பவன், பொதுச்செயலாளர் சிறையில் இருக்கும் நிலையில் அவரை நீக்குவேன் என்று சொல்வதா என்று எம்எல்ஏக்கள் கொதித்தெழுந்தனர். கட்சியை ஒன்றுபடுத்துகிறோம் என்கிற பெயரில் சுயநல சிந்தனையோடு பதவிகளை பாதுகாக்க வியாபார உடன்படுக்கை செய்து கொண்டுள்ளனர்.

சசி தலைமையில் தான்
வேறு வழியில்லாமல் முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். எம்எல்ஏக்கள் பயம் காரணமாக புதுச்சேரியில் இல்லை, கட்சியை காக்க வேண்டும் என்பதால் தான் அங்கு தங்கியிருக்கிறார்கள். இவர்களின் பணம் எங்கள் ஆதரவு எம்எல்எக்களை ஒன்றும் செய்துவிடாது சசிகலா தலைமையில் கட்சியை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எம்எல்ஏக்களின் விருப்பம்.

ஆபரேஷன் தொடங்கியுள்ளது
இதுவரை வெளிப்படையாக 21 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சியின் பாதுகாப்புக்காக மேலும் பலர் இருக்கிறார்கள், அவர்கள் தான் இந்தக் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றப் போகிறார்கள். கட்சியை பலப்படுத்துவதற்கான ஆபரேஷன் அறுவை சிகிச்சை சசிகலா ஒத்துழைப்புடன் தொடங்கியுள்ளது, என்று தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications