தினகரன் தரப்பின் அதிரவைக்கும் அடேங்கப்பா பேரம்
முதல்வர் நாற்காலியை கைப்பற்ற தினகரன் தரப்பு படுதீவிரமாக அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசி வருகிறதாம்.
Recommended Video
சென்னை: முதல்வர் நாற்காலி கனவு தினகரன் தரப்பை படாதபாடுத்துகிறதாம்.. இதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களிடம் மலைக்க வைக்கும் பெரும் தொகையை முன்வைத்து பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை; தமது அணியை சேர்ந்த ஒருவருக்கே முதல்வர் பதவி என தினகரன் அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில்தான் தினகரன் படுதீவிரமாக இருக்கிறாராம்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது சசிகலாவுக்கும் தினகரனுக்கும் சரியாக பொருந்தும். கைக்கு எட்டும் தொலைவில் இருந்த முதல்வர் நாற்காலி இருவருக்குமே கிடைக்காமல் போய்விட்டது.
நொறுங்கிய சசி கனவு
சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் சசிகலாவின் முதல்வர் கனவு நொறுங்கியது. தினகரன் மீது வழக்குகள் இருந்தாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவரை ஆதரிக்க தயாராக இல்லை.
மலைக்க வைக்கும் பேரம்
ஆதரித்த எம்.எல்.ஏக்கள் பதவியும் பறிபோனதால் யாரும் ரிஸ்க் எடுக்கவும் தயாராக இல்லை. இதனால் மலைக்க வைக்கும் தொகையை முன்வைத்து பேரம் பேசி வருகிறதாம் தினகரன் தரப்பு.
டோக்கன் கதையாகுமோ?
தினகரன் தரப்பு தர முன்வந்துள்ள தொகை நிச்சயம் எம்.எல்.ஏக்களுக்கு பெரும் தொகைதான். ஆனால் கூவத்தூர் வாக்குறுதியையே செட்டில் செய்யவில்லை என்பதும் ஆர்.கே.நகர் போல 'டோக்கன்' கொடுத்து ஏமாற்றிவிடுவார்களோ என்பதும் அதிமுக எம்.எல்.ஏக்களின் தயக்கமாக இருக்கிறதாம்.
நிபந்தனையுடன் பேரம்
நம்மை முன்வைத்து அதிகாரத்தை கைப்பற்றிவிட்டால் பேசிய பேரத்தை கேட்க முடியாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது; நாம்தான் ஏமாந்து நிற்க வேண்டும் என்பதும் அதிமுக எம்.எல்.ஏக்களின் கருத்து. அதேநேரத்தில் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு முன்பு வந்துவிடுவதாக இருந்தால் இந்த தொகையை செட்டில் செய்கிறோம்; அதற்கு பிறகு எனில் எதுவும் கிடைக்காது எனவும் குறுக்குசால் ஓட்டுகிறதாம் தினகரன் தரப்பு.