பாஜகவை தைரியமாக யார் எதிர்த்தாலும் வெற்றி நிச்சயம்..தேர்தல் படிப்பினைகள் சொல்வது இதைத்தான்!
தேர்தல் களத்தில் வெல்ல பாஜகவை தைரியமாக எதிர்க்க வேண்டும் என்பதைத்தான் அண்மைக்கால தேர்தல் படிப்பினைகள் தெளிவுபடுத்துகின்றன.
சென்னை: தேர்தல் களத்தில் பாஜகவை யார் திராணியுடன் எதிர்த்தாலும் நிச்சயம் வெல்ல முடியும் என்பதைத்தான் குஜராத் மற்றும் தமிழக இடைத் தேர்தல் முடிவுகள் தெளிவாகவே வெளிப்படுத்துகின்றன.
குஜராத் தேர்தல் களத்தில் பாஜகவை எதிர்த்த காங்கிரஸுடன் இம்முறை கோர்த்தவர்கள் ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாகூர் மற்றும் ஜிக்னேஷ் மேவானி. ஆபாச சிடிக்கள் என்கிற பெயரில் எத்தனையோ அவதூறு தாக்குதல்களை ஹர்திக் பட்டேல் மீது ஏவியது பாஜக.
ஆனால் அத்தனையையும் அசராமல் பாஜக எதிர்ப்பில் உறுதியுடன் பட்டேல் சமூகத்தை அணிதிரட்டி வைத்திருந்தார் ஹர்திக் பட்டேல். குஜராத் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் முகமாக அல்பேஷ் தாகூரும் தலித்துகளின் முகமாக ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸுடன் கை கோர்த்தனர்.

மிரள வைத்த குஜராத்
பாஜகவை உக்கிரமாக எதிர்க்கும் ராகுலுடன் இந்த மூவரணியும் கை கோர்க்க குஜராத் தேர்தல் களம் களைகட்டியது. தேர்தல் முடிவுகளும் பாஜகவை மரண விளிம்புக்கு கொண்டு போய் திரும்ப கொண்டு வந்தது.

செல்வம் போன விரக்தி
தமிழகத்தின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கொள்கை ரீதியாக இல்லாவிட்டாலும் குவித்து வைத்த செல்வங்களையெல்லாம் குறிவைக்கிறதே பாஜக என்கிற கோபத்தில் உக்கிரம் காட்டினார் தினகரன். கூடவே தமிழகத்து உரிமைகளை பாஜக கபளீகரம் செய்ததையும் சேர்த்துக் கொண்டார் தினகரன்.

பம்மிய எதிர்க்கட்சிகள்
இதனால் பாஜக மீது காண்டாக இருக்கும் மக்கள், தினகரனுக்கு ஆதரவாகவும் குரலை வெளிப்படுத்தினர். உக்கிரமாக எதிர்க்க வேண்டியவர்கள் உள்காய்ச்சல் வந்தவர்கள் போல இழுத்துப் போர்த்தி படுத்துக் கொண்டதால் தினகரனே காலத்தின் கோலமாக பாஜகவின் எதிர்ப்பு முகமாக வெற்றி பெற்றுவிட்டார்.

பால பாடம் அவசியம்
குஜராத், தமிழகம் என தேர்தல் களத்தில் பாஜகவை திராணியுடன் எதிர்த்தால் வெற்றி நிச்சயம் என்பது முன்னுதாரணங்களாகிவிட்டன. பம்முகிறவர்கள் இந்த பாலபாடத்தையாவது படிக்கட்டுமே!












Click it and Unblock the Notifications