தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் அடுத்த நடவடிக்கை என்ன?
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆளுநரிடம் மனு கொடுத்த எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் தனபால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குடகு மாவட்டத்திலுள்ள ரிசார்ட்டில் 18 எம்எல்ஏக்களும் உள்ள நிலையில் சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனால் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொறடா உத்தரவை மீறியது தவறு என்பது சபாநாயகர் நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் கொறடா உத்தரவு சட்டசபைக்குள் மட்டுமே பொருந்தும் என்பது தினகரன் தரப்பின் வாதம்.
இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும், சபாநாயகர் நடவடிக்கையை எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் சட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்டனர்.
இதை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் ஊடகங்களிடம் தெரிவித்து வருகிறார்கள். கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு எதிரான எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த அந்த மாநில சபாநாயகர் உத்தரவை உச்சநீதிமன்றம் செல்லாது என அறிவித்தது. அந்த வழக்கை அடிப்படையாக வைத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கோர்ட்டுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.