நீங்க கைகோர்த்தா சும்மா இருப்போமா? ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தினகரன் தீவிரம்!
ஓபிஎஸ்- எடப்பாடி கோஷ்டிகள் இணையும் நிலையில் ஆட்சியை கவிழ்க்க களமிறங்கிவிட்டார் தினகரன்.
சென்னை: ஓபிஎஸ்- எடப்பாடி கோஷ்டிகள் இணைந்தால் ஆட்சியை கவிழ்க்க தினகரன் தயாராகிவிட்டார் என்பதையே அவரது கோஷ்டி எம்.எல்.ஏ. வெற்றிவேல் பேட்டி வெளிப்படுத்துகிறது.
சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக என்கிற முழக்கம் கடந்த சில நாட்களாக வலுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் இது தொடர்பாக சென்னையில் தனியே ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து ஓபிஎஸ் கோஷ்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை தினகரனும் அவரது கோஷ்டி எம்.எல்.ஏக்களும் தொடக்கம் முதலே எதிர்த்து வருகின்றனர்.
தினகரன் மிரட்டல்
தம்மை கட்சியைவிட்டு ஒதுக்கினால் சொடக்கு போடும் நேரத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என ஏற்கனவே தினகரன் மிரட்டியிருந்தார். இதை நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளமும் பதிவு செய்திருந்தது.
வெற்றிவேல் பேட்டி
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ. வெற்றிவேல் இன்று அதிமுக கோஷ்டிகள் இணைப்புக்கு எதிராக பேட்டியளித்துள்ளார். சசிகலா பொதுச்செயலர்; டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என கூறியுள்ளார் வெற்றிவேல்.
தினகரனின் எச்சரிக்கை
அத்துடன் அமைச்சர்கள் பலரும் தினகரனுக்கு தெரியாமலேயே ஆலோசனை நடத்தியுள்ளனர்; ஜெயலலிதா மரணத்துக்கு நீதி வேண்டும் என ஓபிஎஸ் கேட்பது அதிமுகவினரால் ஏற்கவே முடியாது எனவும் வெற்றிவேல் கூறியுள்ளார். வெற்றிவேலின் இந்த பேட்டியானது தம்மை ஓரம்கட்ட நினைக்கும் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகளுக்கு தினகரன் கொடுத்திருக்கும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
ஓபிஎஸ்- எடப்பாடி கோஷ்டிகள் இணையும் போது சில எம்.எல்.ஏக்களை தம் பக்கம் வளைத்துக் கொண்டு ஆட்சியை தினகரன் கவிழ்க்கப் போகிறார் என்பதையும் வெற்றிவேலின் பேட்டி வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே ஆட்சியையே உருவாக்கிய என்னால் ஆட்சியையே கவிழ்க்க தெரியாதா? என தினகரன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.