இது கூவத்தூர் பார்ட் 2... 19 ஆதரவு எம்எல்ஏக்களையும் புதுச்சேரிக்கு ஓட்டிச் செல்லும் தினகரன் குரூப்!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுச்சேரிக்கு தனி காரில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
Recommended Video
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுச்சேரிக்கு தனி காரில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள விடுதியில் தனித்து வைக்கப்பட உள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் பிரிந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் நேற்று இணைந்தன. தினகரன் அணியை முற்றிலும் ஒதுக்கி வைத்துள்ள நிலையில் அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று காலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரைச் சந்தித்தனர்.
ஊழல் ஆட்சி
அப்போது, எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்ளும் கடிதத்தை அவர்கள் ஆளுநரிடம் சமர்ப்பித்தனர். அதில் ஊழல் ஆட்சி புரிவதாக எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றச்சாட்டுக்களை வைத்தனர்.
புதுச்சேரிக்கு கடத்தல்
இதனைத் தொடர்ந்து, தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் மொத்தமாகத் தனியார் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து தனி கார் மூலம் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
2வது கூவத்தூர்
அங்கு அவர்கள் அனைவரும் மொத்தமாக ஒரு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைத்த போது கூவத்துரில் 122 எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டது போன்று இவர்களையும் தனி விடுதியில் அடைத்து வைக்கத் தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
எத்தனை நாள் நாடகம்
மேலும், 19 எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பேசி மனதை மாற்றிவிடக் கூடாது என்பதற்காகவே தினகரன் சார்பில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடகம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.