துப்பாக்கிச் சூடு... கண்ணால் காண்பது பொய் என்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்: துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தவுடன் பேச வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேரணியாக கலெக்டர் அலுவலகம் செல்லவிருந்த மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. திட்டமிட்டு சுட்டதாகவும், வேண்டுமென்றே சுடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல்லில் கிராம செவிலியர் சங்கத்தின் சார்பில் மகளிர் தினம் மற்றும் மே தினத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து போராட வேண்டும். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.
தூத்துக்குடி சம்பவம் எதிர்பாராத விதமாக நடைபெற்ற சம்பவம். அதிலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிற போது இது போன்ற இக்கட்டான நிலை ஏற்படும் என்று பேசியுள்ளார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.