11 ஆவது பிரசவத்தில் இறந்த பெண்ணின் 10 குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்க்க தாத்தா உறுதி!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 10 குழந்தைகளுக்கு தாயான பெண், 11 ஆவது பிரசவத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் அவருடைய மாமனார் தனது 10 பேரக் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்குவேன் என்று உறுதி கூறியுள்ளார்.
திண்டுக்கல் தோட்டனூத்து பகுதியை சேர்ந்தவர் சுப்பன். இவர், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பழனியம்மாள் .
இவர்களுக்கு மணிகண்டன் என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர். இதில் மணிகண்டனுக்கு சீலப்பாடியில் உள்ள உறவினர்கள் வழியில் சித்ரா என்ற பெண்ணை கடந்த 1998 ஆம் ஆண்டு சுப்பன் திருமணம் செய்துவைத்தார். மணிகண்டனுக்கும், சித்ராவிற்கும் 10 குழந்தைகள் பிறந்துள்ளன.
இந்த நிலையில், 11 ஆவது முறையாக கர்ப்பமான சித்ரா, பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மாமனார் சுப்பன், "சித்ரா தனது குழந்தைகளை அளவு கடந்த பாசத்துடன் வளர்த்தார். அதைப்போலவே நானும் அவரது குழந்தைகளை வளர்க்க ஆசைப்படுகிறேன். விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கும் எண்ணம் இல்லை.
நான் அரசு வேலை பார்த்து ஓய்வூதியம் பெற்று வருகிறேன். இப்போது வங்கி ஏ.டி.எம் மையத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறேன். எனது மகன் கூலி வேலைதான் செய்து வருகிறார்.
அவர் சம்பாதித்து கொடுக்கும் பணத்தை கொண்டும், எனது வருமானத்தை வைத்தும் 10 குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.