கதிராமங்கலம் போராட்டத்தில் கைது.. பேரா. ஜெயராமன் உட்பட 10 பேருக்கு காவல் நீட்டிப்பு
கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரின் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: ஓஎன்ஜிசி முற்றிலும் வெளியேற வேண்டும் என்று கோரி கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரின் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்காக பூமியில் புதைக்கப்பட்ட குழாயில் இருந்து திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
இதனைக் கண்டித்தும் ஒஎன்ஜிசி முற்றிலுமாக கிராமத்தில் இருந்து வெளியேறக் கோரியும் கடந்த மாதம் 30ம் தேதி கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டத்தில் வன்முறை
இந்தப் போராட்டத்தை போலீசார் வன்முறை கலவரமாக மாற்றினார்கள். போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

விடுதலை கோரி போராட்டம்
இவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கதிராமங்கலத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசியல் தலைவர்கள் கண்டனம்
இதே கோரிக்கையை பல அரசியல் கட்சித் தலைவர்களும் முன் வைத்தனர். குறிப்பாக, வைகோ, ராமதாஸ், தொல். திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் கைது எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

காவல் நீடிப்பு
இந்நிலையில், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் ஜூலை 28ம் தேதி வரை காவலில் வைக்க மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது போராட்டக்காரர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களையும் கொத்தளிக்கச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications