பட்டாசு கடை உரிமம் வழங்க லஞ்சம்: மாவட்ட வருவாய் அலுவலக உதவியாளர் கைது
மதுரை: தற்காலிக பட்டாசுக்கடை வைக்க அனுமதி வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்ட மாவட்ட வருவாய் அலுவலரின் உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
மதுரை அருகே கருப்பாயூரணியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் அதே பகுதியில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை நடத்த அனுமதி கேட்டு மாவட்ட வருவாய் அதிகாரியிடம் விண்ணப்பித்தார். இதற்கு அனுமதி வழங்க 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என டிஆர்ஓவின் உதவியாளர் அன்புசெல்வன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேரம் பேசியதாகவும் தெரிகிறது. இறுதியில் 35 ஆயிரம் ரூபாய்க்கு குறையவில்லை. இதனால் அதிருப்தியடைந்த சுப்புராஜ் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். அதன் பேரில் ரசாயனம் தடவிய 35 ஆயிரம் ரூபாய் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுப்புராஜிடம் கொடுத்து அனுப்பினர்.
காவல்துறையினரின் அறிவுரைப்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மாடியில் உள்ள டிஆர்ஓ அலுவலகத்திற்கு சென்ற சுப்புராஜ் உதவியாளர் அன்புசெல்வத்திடம் ரூபாயை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து அந்த ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அன்புசெல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications