கடன் வாங்கி கஜனாவை காலி செஞ்சுட்டாங்க... ஜெயலலிதாவை சொல்கிறாரா திவாகரன்?
ரூ. 2 லட்சம் கோடி கடன் வாங்கியும் தமிழகத்தின் கஜானா காலியாவே இருக்கிறது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
ஈரோடு: அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசை தினசரியும் குற்றம் சாட்டி வரும் திவாகரன், தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது யாரை சொல்கிறார்,எடப்பாடி பழனிச்சாமி அரசையா? அல்லது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசையா?
சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று ஈரோடில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, 19 எம்எல்ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த பின்னர் உடனடியாக வேறு முதல்வரை தேர்வு செய்ய வேண்டும்.
ஆளுநர் அதை செய்யாமல் பந்து என்னுடைய கோர்ட்டில் இல்லை என்று கூறுகிறார். இது நியாயமான பதிலாக தெரியவில்லை. எதிர்கட்சியினர் அனைவரும் இதற்கு கருத்து சொல்லி வருகின்றனர். உட்கட்சி பிரச்சினையாக இருந்தாலும் புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டும்.

50க்கும் மேற்பட்டோர் ஆதரவு
19 பேர் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார்கள். 48பேர் எங்களுக்கு மறைமுகமாக ஆதரவாக இருக்கிறார்கள். நாங்கள்தான் அவர்கள் பேசாமல் இருக்க சொல்லியிருக்கிறோம். அவர்களும் கடிதம் கொடுத்தால் ஆட்சிக்கு ஆபத்துதான்.

ஆள்பவர்கள் சரியில்லை
கட்சியும் ஆட்சியும் பின்னி பிணைந்தது. ஆனால் இன்றைக்கு ஸ்திரமில்லாத அரசு நடப்பது அதிமுகவிற்குதான் கெட்ட பெயர். ஜெயலலிதா இல்லாத அதிமுகவை நிமிர்ந்து நிற்க செய்ய வேண்டும். அதற்கு ஆள்பவர்கள் நன்றாக செயல்பட வேண்டும். தெளிவான அரசை தர வேண்டும்.

சரியாக கவனிக்க முடியவில்லை
ஆக்டிவ் ஆக ஸ்பீடாக, கரப்சன் இல்லாத அரசாக இருக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி சிறந்த நிர்வாகியாக இருந்தாலும், இப்போது கட்சியையும், ஆட்சியையும் அவரால் சரியாக கவனிக்க முடியவில்லை. அமைச்சர்கள் 8 பேர் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கூறி நச்சரிக்கின்றனர்.

கமிஷன், கரப்சன்
இப்போது எந்த ஒரு வேலைக்கும், 24 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறார்கள். அரசு வேலை நியமனத்திற்கு லஞ்சம் வாங்குகிறார்கள். சத்துணவு அமைப்பாளருக்கு ரூ. 3 லட்சம், வனத்துறையில் டிரான்ஸ்பருக்கு ரூ. 3 லட்சம் முதல் 15 லட்சம் வரை லஞ்சம் வாங்குகின்றனர். அனைத்திலும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

கடன் சுமை
கடந்த 5 ஆண்டுகாலமாக ரூ. 2 லட்சம் கோடி கடன் வாங்கி விட்டனர். கடன் வாங்கியே இந்த கஜானாவை காலி செய்து விட்டனர். இந்த கடன் சுமை எல்லாம் மக்களின் தலையில்தான் விழும். எதுவுமே ஒழுங்காக நடக்கவில்லை என்று கூறியுள்ளார் திவாகரன்.

யாரை சொல்கிறார்
கஜானாவை காலி செய்து விட்டார்கள் என்று திவாகரன் யாரை சொல்கிறார்.? இந்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி கடன் சுமை கூடி விட்டது என்று ஜெயலலிதாவை கூறுகிறாரா? என்று கேட்கின்றனர் அதிமுகவின் உண்மை தொண்டர்கள்.

சரித்திர பிழை
தமிழக அரசில் எதுவும் நடக்கவில்லை வெறும் கூடுதான் உள்ளது அதை வைத்து ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் மிகப்பெரிய சரித்திர பிழையை எழுதுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் திவாகரன். இதற்கு ஆள்பவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்களோ?












Click it and Unblock the Notifications