சப்புக் கொட்டி சாப்பிடலாம் தூத் பேடா.. காஜு கத்லி.. இந்தத் தீபாவளிக்கு.. வாங்க செஞ்சு பாருங்க!
தீபாவளியை ஒட்டி ஒன் இந்தியா வாசகர்களுக்காக தூத் பேடா, காஜு கத்லி, ரசகுல்லா போன்ற இனிப்புகளை சுலபமாக வீட்டிலேயே எப்படிச் செய்யலாம் எனத் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. முன்பெல்லாம் பத்து நாட்களுக்கு முன்பே தீபாவளிக்கு என்ன பலகாரங்கள் செய்யலாம் என வீட்டுப் பெண்கள் யோசித்து செயல்பட ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால், நிலைமை தற்போது அப்படியில்லை. முதல்நாள் ஸ்வீட் கடைக்குச் சென்றோமோ எவ்வளவு விலை சொன்னாலும், அதில் கொஞ்சம் ஸ்வீட் வாங்கினோமோ, தீபாவளியன்று சம்பிரதாயிரத்திற்கு சாப்பிட்டோமா என்று ஆகிவிட்டது.
காரணம் கடைகளில் கிடைக்கும் விதவிதமான ஸ்வீட்ஸ்.
ஆனால், அவ்வாறு விலை கொடுத்து வாங்கும் கண்ணைப் பறிக்கும் ஸ்வீட்கள் ஆரோக்கியமானது தானா என்றால், கொஞ்சம் யோசிக்க வேண்டியதாய் தான் இருக்கிறது.
அதனால், வாசகர்களாகிய உங்கள் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு கடைகளில் கிடைக்கும் சில இனிப்புகளை வீட்டிலேயே எளிய முறையில் செய்வதற்கான குறிப்புகள் இதோ...
தூத் பேடா
தேவையான பொருட்கள்:
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - ஒன்றரை கப்
சோள மாவு (அ) மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்)
பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன்.
செய்முறை:
பாலைக்கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சவும். பால் பாதி அளவாக ஆனபின் சர்க்கரை சேர்க்கவும். பிறகு, பொடித்த ஏலக்காய் சேர்த்து, சோள மாவு அல்லது மைதா மாவு சேர்த்துக் கிளறவும். கெட்டிப்பதம் வந்ததும், தேவையான வடிவத்தில் ஷேப் செய்து வெட்டி பரிமாறவும்.
காஜு கத்லி
தேவையான பொருட்கள் :
முந்திரி பருப்பு, சர்க்கரை - தலா 100 கிராம்
பால் - சிறிதளவு (அழுக்கை நீக்க)
நெய் - சிறிதளவு (தட்டில் தடவ)
செய்முறை :
முந்திரி பருப்பை நன்கு பொடி செய்யவும். பின்னர் ஒரு பங்கு சர்க்கரைக்கு அரை பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அந்த சர்க்கரைப் பாகில் சிறிதளவு பால் விட்டு, அழுக்கை வடிகட்டி கொள்ளவும். பின்னர் பாகு கம்பி பதம் வந்ததும் பொடித்த முந்திரிப்பருப்பை போட்டுக் கிளறவும். நன்கு சேர்ந்து கொதி வரும் நிலையில் அதனை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற விடவும். பின்னர் அதனை நமக்கு பிடித்தமான வடிவத்தில் கட் செய்து பரிமாறலாம்.
ரசகுல்லா:
தேவையான பொருள்கள் :
பால் - 1 லிட்டர்
எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர்
சர்க்கரை - 400 கிராம்
மைதா - 25 கிராம்
ரோஸ் எசன்ஸ் - 2, 3 துளிகள்
தண்ணீர் - 2 லிட்டர்
செய்முறை :
ஒரு பெரிய பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, நன்றாகக் கொதிவரும்போது ஒரு மூடி எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் கலக்கவும். பால் திரிந்ததும் அதனை மெல்லிய துணியில் வடிகட்டவும். பின்னர் இந்த பனீர் மூட்டையை குளிர்ந்த நீரில் கழுவினால், அதில் உள்ள எலுமிச்சை வாசனை போய் விடும். பின்னர் இந்த பன்னீரை நன்கு தண்ணீரை வடித்து விட்டு, நன்றாக மாவு பதத்திற்கு பிசையவும். தேவைப்பட்டால் சிறிதளவு மைதா சேர்த்துக் கொள்ளலாம். ஒன்றாக சேர்ந்து நன்கு மாவு பதத்திற்கு வந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
இதற்கிடையே சர்க்கரையை நீர் சேர்த்து கொதிக்க விடவும். அது பாகுபதம் வருவதற்கு முன்னதாகவே செய்து வைத்துள்ள பனீர் உருண்டைகளை அதில் போட வேண்டும். பின்னர் மூடி வைத்து சுமார் 20 நிமிடங்கள் பனீர் உருண்டைகளை வேக விட வேண்டும். பின்னர் ஆறவிட்டு, பாகிலிருந்து ரசகுலாக்களை தனியாக எடுத்து குளிர வைக்கலாம், இல்லை அப்படியே சாப்பிடலாம்.