தேமுதிகவுக்கு கூட்டம் வரலைன்னு சொன்னா செவிட்டுல விடுங்க... விஜய பிரபாகரன் சர்ச்சை பேச்சு
கும்பகோணம்: தேமுதிகவுக்கு கூட்டம் கூடவில்லை என்று சொல்கிறவர்கள் கன்னத்தில் அறையுங்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியாக கோலோச்சிய தேமுதிக இன்று எங்கே இருக்கிறது என தெரியாத அளவுக்கு காணாமலேயே போய்விட்டது. தமிழக தேர்தல் களத்தில் தீர்மானிக்கிற சக்தியாக தேமுதிகவும் ஒரு காலத்தில் இருந்தது என்பதாகிப் போனது அதன் வரலாறு.

தேமுதிக சர்ச்சை பேச்சுகள்
தேமுதிகவின் பெரும்பாலான 2-ம் கட்ட தலைவர்கள் பிற கட்சிகளுக்கு தாவிவிட்டனர். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் மட்டுமே தேமுதிகவின் முகங்களாக இருக்கின்றனர். பிரேமலதாவும் விஜயபிரபாகரனும் பொதுமேடைகளில் பேசுகிற பேச்சுகள் எப்போதும் சர்ச்சையாகத்தான் இருக்கின்றன.

செவிட்டில் அறையுங்க..
இந்த நிலையில் கும்பகோணம் அருகே தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் விஜய பிரபாகரன் பேசியதாவது: கும்பகோணத்தில் முன்னர் நான் பேசியது சர்ச்சையானதால் பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதில் கொடுத்தனர். தேமுதிக முன்னர் போல.. இப்போது தேமுதிகவுக்கு கூட்டமே வருவதில்லை.. தேமுதிகவுக்கு கூட்டம் குறைவு.. இப்படியெல்லாம் பேசுகிறவர்கள் செவிட்டிலேயே விடுங்கள்.

அதிமுக பரிதாபம்
தேமுதிகவுக்கு வாக்கு சதவீதம் என்பது குறைந்துதான் உள்ளது. அதனை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்... ஏற்றுக் கொள்கிறோம். இதற்கு காரணமே அரசியல் சூழ்ச்சிதான். தமிழக அரசியல் என்பது தேமுதிகவை சுற்றித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை யாருமே ஏன் பேசுவதே இல்லை? தேமுதிக கூட்டணியில் இல்லாததால் அதிமுக, எதிர்க்கட்சியாகிவிட்டது என்பதை அந்த கட்சியினரே ஒப்புக் கொள்கின்றனர்.

விஜயகாந்த் சிங்கம்
விஜயகாந்த் உடல்நலம் சரியில்லை என்பதால் வீட்டில் இருக்கிறார். விஜயகாந்த் வெளியே வராமல் இருக்கலாம். ஆனால் குகையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான். எல்லோரும் என்னுடன் இருங்கள்.. உங்களால் தேமுதிக மீண்டும் எழும். தேமுதிகவின் பலமும் அதிகரிக்கும். இவ்வாறு விஜய பிரபாகரன் பேசினார்.












Click it and Unblock the Notifications