கூட்டணி விஷயத்தில் ஆளுக்கு ஒன்று பேசும் கருணாநிதி- ஸ்டாலின்: என்ன நடக்குது திமுகவில்?
சென்னை: தேமுதிகவின் முடிவினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஸ்டாலின் சொல்ல... தேமுதிக கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது என்று கருணாநிதி பேச... ஸ்டாலின் மீண்டும் அதை மறுக்க... திமுக முகாமில் என்னதான் நடக்கிறது என்று அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பம் கும்மியடிக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அரசியல் களம் படுபரப்பாகவே உள்ளது. தேமுதிக கூட்டணிக்கு வரும், பழம் நழுவி பாலில் விழும் என்று திமுக தலைவர் கருணாநிதி காத்திருக்க, தனித்து போட்டி என்று அறிவித்து அதிர்ச்சியூட்டினார் விஜயகாந்த்.
விஜயகாந்தின் மனநிலை மாறும் என்ற நம்பிக்கையிலே பாஜக, மக்கள் நலக்கூட்டணி,திமுக கட்சிகள் காத்திருக்கின்றன. விஜயகாந்தை விடாமல் விரட்டுகிறது திமுக. ஸ்டாலின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தை பெயிலியரானதால் இனி தானே கூட்டணியை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி மருத்துவர் ஒருவர் உதவியுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினாராம். ஆனால் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை கைவிட விஜயகாந்த் தயாராக இல்லை.

பத்தவைத்த ஜவாஹிருல்லா
திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை ஆலோசனை என திமுக தரப்பு பிசியானது. பல அமைப்புகளும் அறிவாலயத்திற்கு வந்து ஆதரவு கடிதங்களை அளித்தனர். கடந்த 19ம் தேதி கருணாநிதியை சந்தித்து ஆதரவு தெரிவித்த மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெற வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

ஸ்டாலின் கருத்து
அந்த பேட்டிக்கு சில மணி நேரத்தில் ரியாக்சன் தெரிவித்த மு.க.ஸ்டாலின், தேமுதிக திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று கூறுவது ஜவாஹிருல்லாவின் தனிப்பட்ட விருப்பம். தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தோம், அதை ஏற்பதும், ஏற்காததும் தேமுதிகவின் உரிமை என்றார்.

கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை
திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டுக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அறிவித்தார் ஸ்டாலின்.

கருணாநிதி நம்பிக்கை
ஸ்டாலின் சொன்னதற்கு மாறாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கருணாநிதி திங்கள்கிழமை கூறினார். கூட்டணி பேச்சு தொடர்ந்து நடைபெறுவதாகவும், திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் மறுக்கும் ஸ்டாலின்
கருணாநிதியின் கருத்து ஊடகங்களில் உடனே பரபரப்பு செய்தியானது. ஆனால் விஜயகாந்த் தரப்போ இதற்கு எந்தவித ரியாக்சனும் காட்டவில்லை. ஆனால் தேமுதிகவுக்கு கூட்டணி குறித்து புதியதாக எந்த ஒரு அழைப்பும் விடுக்கப்படவும் இல்லை; பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஸ்டாலின்தான் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது பழைய அழைப்பு
கூட்டணிக்கு வரச்சொல்லி தேமுதிகவிற்கு முன்பு விடுக்கப்பட்ட அழைப்பைத்தான் தலைவர் இப்போது நினைவு படுத்தினார். அதை ஊடகங்களாகிய நீங்கள்தான் மாற்றி போட்டு விட்டீர்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications