உள்ளாட்சித் தேர்தல் விருப்பமனு... தேமுதிக அறிவிப்பு
சென்னை: தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் வரும் 15-ம் தேதி வரை விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்குமாறு அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், மாவட்ட தேமுதிக அலுவலகங்களில் விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் இன்று விருப்பமனு விநியோகம் தொடங்கிவிட்ட நிலையில், நாளை அதிமுகவில் தொடங்குகிறது. இதற்கிடையே தேமுதிகவும் நாளையே விருப்பமனுக்களை விநியோகிக்கிறது.
மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான விண்ணப்பத் தொகையையும் தேமுதிக தலைமை நிர்ணயித்துள்ளது.
கட்சிகள் தீவிரம்
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக, தலைமைகள் கூட்டணிக் கட்சிகளோடு இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை ஒரு புறம் நடத்திக்கொண்டே, விருப்பமனு விநியோகமும் செய்கிறது.
விருப்பமனு
இந்நிலையில் தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர், நாளை முதல் விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை தேமுதிக மாவட்ட அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டண விபரம்
மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 15,000 ரூபாயும் நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் 7,000 ரூபாயும், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 4,000 ரூபாயும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர் 1,500 ரூபாயும் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப்படிவம்
திமுக 6 நாட்களும், அதிமுக 2 நாட்களும் மட்டுமே விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், தேமுதிக மட்டும் 10 நாட்கள் கால அவகாசம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.