தேமுதிகவுக்கும் விருப்பம் இல்லை.. பாஜகவும் ஒதுங்க முடிவு... ஆர்.கே.நகரில்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தேமுதிகவும் விரும்பவில்லையாம். இதன் காரணமாக பாஜகவும் போட்டியிடாமல் ஒதுங்கி விட முடிவு செய்துள்ளதாம்.
ஜெயலலிதாவுக்காக காலியான தொகுதி ஆர்.கே.நகர். தொகுதி மக்கள் வலிந்து திணிக்கப்பட்டுள்ள இந்த இடைத் தேர்தலில் ஜெயலலிதா மட்டுமே பிரதான வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அவருக்கு அடுத்து பெரிய கட்சி என்றால் அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. அக்கட்சி சார்பில் சி.மகேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

மற்றபடி திமுக, மதிமுக, பாமக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிடவில்லை. தேமுதிக, பாஜக முடிவு தெரியாமல் இருந்து வருகிறது. தற்போது அவையும் போட்டியிடாது என்றே தெரிகிறது.
தேமுதிக போட்டியிட்டால் அதை ஆதரிக்க பாஜக முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது தேமுதிக போட்டியிட விருப்பமில்லை என்று கூறி விட்டதாக சொல்கிறார்கள். இதனால் பாஜகவும் ஒதுங்கி விட முடிவு செய்துள்ளதாம்.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வந்தனர் தமிழக பாஜக தலைவர்களான தமிழிசை, மோகன்ராஜுலு போன்றோர்.
அப்போது தாங்கள் நிற்க விரும்பவில்லை என்று விஜயகாந்த் கூறி விட்டாராம். இதனால் பாஜகவும் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாம்.
பிரேமலதாவிடம் ஒரு வார்த்தை
நேற்று தமிழிசை, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவையும் சந்தித்துப் பேசினார். தேர்தல் குறித்து அவருடனும் கலந்து பேசினார். பிரேமலதாவும் தனது கணவரைப் போலவே, தேர்தலில் நிற்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறினாராம். தமிழிசை வந்தபோது வீட்டில் விஜயகாந்த் இல்லையாம்.












Click it and Unblock the Notifications