மதுவிலக்கு பற்றி பேச தகுதியற்ற ஒரே தலைவர் கேப்டன்: விஜயகாந்த் உண்ணாவிரதத்தில் பகீர் 'பேச்சு'
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பரபரப்புக்கும் பஞ்சாயத்துக்கும் பஞ்சமே இருக்காது என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அனைத்து கட்சிகளும் போராட்டங்களை கையிலெடுத்து வருகின்றன. இந்த வகையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குடும்பத்துடன் விஜயகாந்த் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வழக்கம் போல "கேப்டன் கருப்பு.. கண்ணில் தெரியுது நெருப்பு" என்ற அடுக்குமொழிகளுடன் புகழாரம் சூட்டப்பட்டன.
இதேபோல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்த ஒரு நிர்வாகி, "தமிழகத்திலேயே பூரண மதுவிலக்குப் பற்றி பேசுவதற்கு "தகுதியற்ற" ஒரே தலைவர் கேப்டன்தான்" என்று பேசிவிட பக்கென்று அதிர்ந்தது கூட்டம்..
உடனே அவர் சுதாரித்துக் கொண்டே தகுதியுள்ள ஒரே தலைவர் எங்கள் கேப்டன் கேப்டன்தான் என்று பதற்றத்தோடு முடித்தார்..
மேடைக்குப் பின்னால் என்ன நடந்துச்சோ?