மாவட்டச் செயலாளருக்கு எதிராக விஜயகாந்த் விழாவில் தீக்குளித்த தேமுதிக தொண்டர் மரணம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தேமுதிக செயலாளர் ரவிக்குமாருக்கு எதிராக, கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்ட கூட்டத்தின் இறுதியில் தீக்குளித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த தேமுதிக தொண்டர் கஜேந்திர பிரபு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தேமுதிக சார்பில் கடந்த வாரம் பழனியில் கிழக்கு மேற்கு மாவட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா நடைபெற்றக் கொண்டிருக்கும் போது திண்டுக்கல் 8வது வார்டு கிளைச் செயலாளர் கஜேந்திர பிரபு கூட்டத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
இதையடுத்து அவரை பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் விஜயகாந்த் மதுரை விரைந்து வந்து கஜேந்திர பிரபுவைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது விஜயகாந்த்திடம், மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் குறித்து பல புகார்களை கஜேந்திர பிரபு அடுக்கியதாக கூறப்படுகிறது. தன்னிச்சையாக செயல்படுகிறார், தன்னைப் பதவியிலிருந்து நீக்கி விட்டார். அவர் இருந்தால் கட்சி உருப்படாது, அவரை மாற்ற வேண்டும். இதற்காகவே தான் தீக்குளித்ததாக கூறியிருந்தாராம் கஜேந்திர பிரபு.
இதையடுத்து கட்சியினருடன் ஆலோசனை செய்து வந்த விஜயகாந்த் நேற்று காலை ரவிக்குமாரை பதவியிலிருந்து நீக்கினார். இந்த நிலையில் நேற்று இரவு கஜேந்திர பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு மனைவியும், சிறு பையன்களான இரு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.