''அம்மா, அய்யா வாங்க.. உளுந்தூர்ப்பேட்டையில் மாநாடு வச்சிருக்கோம்....''
திருச்சி: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் மாநாடு நடத்தவுள்ள தேமுதிக அதற்கான முஸ்தீபுகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் திருச்சி தேமுதிகவினர் இதுதொடர்பாக அழைப்பிதழ் அச்சடித்து அதை வீடு வீடாக கொடுத்து மக்களைக் கவர்ந்து வருகின்றனர்.
உளுந்தூர்ப்பேட்டை அருகே எறஞ்சி என்ற இடத்தில் மாநில ஊழல் எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாட்டை அறிவித்துள்ளது தேமுதிக. பிப்ரவரி 2ம் தேதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில்தான் தனது கட்சியின் கூட்டணி குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்தும் விஜயகாந்த் அறிவிப்பார் என்று அத்தனை பேரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த மாநாட்டிற்கு இதுவரை போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை. இருப்பினும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் திருச்சி உறையூர் 56வது வார்டு மாநகர் மாவட்டச் செயலாளர் விஜயராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், மாநாடு குறித்து அழைப்பிதழை அச்சடித்து அதை வீடு வீடாக கொடுத்து வருகின்றனர். குழந்தைகளைக் கூட விடாமல் அவர்கள் கையிலும் அழைப்பிதழைக் கொடுக்கிறார்கள்.