தனித்துப் போட்டியிட தேமுதிக தொண்டர்கள் விருப்பம்- ஆனால், தலைமை முடிவையும் ஏற்பர்: விஜயகாந்த்
உளுந்தூர்பேட்டை: லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடவே தேமுதிக தொண்டர்கள் விரும்புவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மாநாட்டில் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் கூட்டணி தொடர்பான கட்சித் தலைமையின் முடிவை தொண்டர்கள் ஏற்பார்கள் என்றும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதனால் அக்கட்சி கூட்டணி அமைக்குமா? அமைக்காதா? என்ற சஸ்பென்ஸை நீடிக்க வைத்திருக்கிறார்.
உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபெற்ற தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

நரை இல்லாத இளைஞர்கள்
விழுப்புரத்தில் கடல் இல்லையே என்று நினைத்தேன். கடல் இருக்கிறது என்பதை இங்கே கூடியிருக்கும் மக்கள் கடல் நிரூபித்திருக்கிறது. இங்கே கூடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் தலையில் நரை இல்லாத இளைஞர்கள் என்பதில் மகிழ்ச்சி.

போலீஸ் வேடமே போடமாடேன்..
தற்போது காவல் துறையின் நிலையைக் கண்டு, இதுவரை திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்ததற்கு வெட்கப்படுகிறேன். இனி, அது அப்படிப்பட்ட வேடத்தில் நான் நடிக்க மாட்டேன். என் மகனையும் நடிக்கவிடமாட்டேன்..

டாஸ்மாக்
இளைஞர்களைக் கெடுப்பதற்காகவே அரசு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளை திறந்து வைத்திருக்கிறது. டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயிக்கும் அரசு, விவசாயத்திலும் இலக்கை நிர்ணயிக்கலாமே?

ரூ10க்கு தண்ணீர்
இலவசமாக தண்ணீர் தர வேண்டிய முதல்வரே தண்ணீரை 10 ரூபாய்க்கு விற்கிறார். மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. ரூ1 க்கு இட்லி கொடுத்துவிட்டு ரூ10க்கு குடிக்க சொல்கிறீர்கள்.. தண்ணியை கொடுத்து தண்ணி காட்டுகிறீர்களோ?

கூடங்குளம்
கூடங்குளம் மக்களை மாநில அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது?

சாதி மதம்- இலங்கை தமிழர் பிரச்சனை..
சாதி, மதத்தை வைத்துக்கொண்டோ, இலங்கைத் தமிழரின் கண்ணீரை வைத்துக்கொண்டோ அரசியல் செய்ய விரும்பவில்லை.

ஆளப்போவது தேமுதிகவே
டெல்லி செங்கோட்டைக்குச் சென்றாலும் சரி, சென்னை ஜார்ஜ் கோட்டைக்குச் சென்றாலும் சரி, இனி ஆளப்போவது தேமுதிகதான். அதிமுக, திமுகவை மக்கள் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்கள். 2016-ல் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி.

என்னது ஜெ. பிரதமரா?
தமிழகத்தில் மின்வெட்டு உள்ளிட்ட எத்தனையோ குறைகள் இருக்கிறது. அவற்றை எல்லாம் சரிசெய்ய முடியவில்லை. இவர் பிரதமராகி என்ன செய்யப் போகிறார்?

துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை..
என் மனைவி சொன்னதுபோலவே எதிரிகளை மன்னித்தாலும் மன்னிப்பேன்; ஆனால், துரோகிகளை மன்னிக்க மாட்டேன்.

லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம்
லஞ்சம் கொடுக்கமாட்டோம், வாங்கவும் மாட்டோம் என இந்த மாநாட்டில் உறுதிமொழி ஏற்போம்.

தனித்து போட்டி?
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்கலாமா வேண்டாமே என்று உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். சொல்லுங்கள். கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் சொல்கிறார்கள்.

தலைமை முடிவை ஏற்பார்கள்..
ஆனால், தேர்தல் கூட்டணி தொடர்பாக தலைமை வேறு முடிவு எடுத்தால், அதனை தொண்டர்கள் ஏற்பார்கள்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமது பேச்சின்போது, தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக சாடினார். ஆனால் திமுக குறித்து எதுவும் சாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications