பழம் நழுவி ‘தேனில்’ விழுந்து விட்டது...: பிரேமலதா
மதுரை: பழம் நழுவி பாலில் விழுகிறது என்று கலைஞரும், பழம் நழுவி விஷத்தில் விழுந்தது என்று பொன்.ராதாகிருஷ்ணனும் கூறினார்கள். ஆனால் பழம் நழுவி தேனில் விழுந்து மக்களின் ஆதரவை பெற்று உள்ளது என தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியோடு சேர்ந்து புதிய கூட்டணி உருவாகியுள்ளது.
இந்நிலையில், மதுரை முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வெற்றிக் கூட்டணி...
இதுவரை தேமுதிகவை தவிர எந்தக் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியும் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. எங்களது கூட்டணியை அறிவித்துவிட்டோம். முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்துவிட்டு முன்னிலையில் இருக்கிறோம். தமிழகத்தில் எங்களது கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

அனைவருக்கும் பதவி...
மற்ற கட்சிகள் அனைத்தும் வேறு, வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து வந்த கட்சிகள். ஆனால் எங்களது கட்சி அப்படி கிடையாது. தன்னுடன் பயணித்து வரும் அனைவரையும் கட்சி பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பவர் கேட்பன்.

தேனில் விழுந்த பழம்...
பழம் நழுவி பாலில் விழுகிறது என்று கருணாநிதியும், பழம் நழுவி விஷத்தில் விழுந்தது என்று பொன்.ராதாகிருஷ்ணனும் கூறினார்கள். ஆனால் பழம் நழுவி தேனில் விழுந்து மக்களின் ஆதரவை பெற்று உள்ளது. தேன் என்று மக்கள் நலக்கூட்டணியை தான் கூறுகிறேன். மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே ஊழல், லஞ்சம் இல்லாத சூழ்நிலையை உருவாக்க முடியும்.

அடுத்த முதல்வர்...
கேப்டன், அ.தி.மு.க. செல்வார், தி.மு.க. செல்வார் என்று பத்திரிகைகள், ஊடகங்கள் தான் அவரை குழப்பியதே தவிர கேப்டன் தெளிவாக தான் இருந்தார். புதிய வாக்காளர்கள், பெண்கள், விவசாயிகள், இளம் தலைமுறையினர் என அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே கட்சி மக்கள் நலக்கூட்டணி தான். அதுவே நம்பர் 1 கூட்டணி. கேப்டனுக்கே தமிழகத்தில் முதல்வர் ஆகும் தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கு உள்ளது. அவரால் மட்டுமே ஊழல் இல்லாத தமிழகத்தை கொண்டு வர முடியும்.

நடிகர் சங்க விவகாரம்...
நடிகர் சங்கத்தில் இருந்த கடனை முற்றிலுமாக அடைத்து, லஞ்சம், ஊழல் இல்லாமல் நேர்மையாக செயல்பட்டார். ஊழலுக்கு அப்பாற்பட்டவர். அவர் ஒருவர் மட்டுமே முதல்வர் ஆவதற்காக அனைத்து தகுதியையும் பெற்றுள்ளவர் என்பதற்கு இதுவே சிறந்த சாட்சி. மக்கள் நலக்கூட்டணியில் உள்ளவர்களையும் யாராலும் குறை சொல்ல முடியாது.

நேர்மை... ஒற்றுமை...
கேப்டன் இருக்கும் இடம் எப்போதும் நேர்மையாக, ஊழல் இல்லாமல் இருக்கும். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளை பற்றி உங்களுக்கே தெரியும். இரு கட்சிகளுக்கு மாற்றாகவே நாங்கள் மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கி உள்ளோம். எங்கள் கூட்டணி பிரிந்து விடும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது ஒரு போதும் பிரியாது. கை விரல்கள் போல் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்.

மாற்றுக் கூட்டணி...
கடந்த 60 கால ஆண்டுகளாக தமிழகத்தை தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமே ஆட்சி செய்துள்ளது. ஆனால் அந்த கட்சிகள் மக்களுக்கு எந்தவித நல்லதையும் செய்யவில்லை. எந்த ஒரு பிரச்சினையையும் தீர்த்து வைக்கவில்லை. காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை சொல்லி கொண்டே போகலாம். இந்த பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதுவதை மட்டுமே வேலையாக கொண்டுள்ளாரே தவிர எந்த ஒரு பிரச்சினையும் தீர்த்தபாடில்லை. எனவே தான் மாற்றுக்கூட்டணியை மக்கள் கேட்கிறார்கள். அதன்படி நாங்களும் மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளோம். மாநகராட்சிகள் எங்கும் சாலைகள் மோசம், போக்குவரத்து நெரிசல், குழிகள் தோண்டி சாலையை வீணாக்கி வைத்துள்ளனர்.

மதுரை...
மதுரையில் தமிழன்னை சிலை, மோனோ ரெயில் திட்டம், துணைகோள் நகரம், ஐ.டி.பார்க், தல்லாகுளம்- பெரியார் பஸ்நிலையம் வரை சுற்று மேம்பாலம், காளவாசல், கோரிப்பாளையம் பகுதிகளில் மேம்பாலம், எய்ம்ஸ் மருத்துவமனை, பாதாள சாக்கடை திட்டம் என அறிவித்த திட்டங்களில் ஏதும் அ.தி.மு.க. செயல்படுத்தவில்லை. மக்களோடு மக்களாக இருப்பதன் மூலம் தான் எங்களுக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து தெரிகிறது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா அப்படி கிடையாது.

பேச்சுவார்த்தை...
முதல்வர் ஜெயலலிதாவிற்கு கும்பிடு போடும் அமைச்சர்களுக்கு நடுவே, அவரை எதிர்த்து கேள்வி கேட்டவர் விஜயகாந்த் மட்டுமே. வெகு விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். எங்களது கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர இருக்கின்றன. அவற்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications