தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட மாஜி டெல்லி மாநில செயலர் தட்சிணாமூர்த்தி அதிமுகவில் ஐக்கியம்
சென்னை: தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மாநில செயலர் தட்சிணாமூர்த்தி முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அந்தமான் மற்றும் டெல்லியில் கிளைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும் அந்த மாநில சட்டசபை தேர்தல்களில் சில இடங்களில் மட்டும் போட்டியிடுவது வழக்கம்.
இதே பாணியில் அதிரடியாக 2013-ம் ஆண்டு டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் தேமுதிக போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. மொத்தமே 2,300 வாக்குகளைத்தான் அத்தேர்தலில் தேமுதிக பெற்றது. இதன் பின்னர் டெல்லி தேர்தல் குறித்து கனவே தேமுதிகவுக்கு வருவதில்லை.
இதனிடையே கடந்த வாரம் அதிரடியாக டெல்லி மாநில செயலர் பதவியில் நீண்டகாலம் இருந்து வந்த தட்சிணாமூர்த்தி கட்சி விரோத நடவடிக்கை காரணமாக பதவியில் இருந்தும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தேமுதிக டெல்லி மாநிலச் செயலாளராக ஜி.எஸ். மணி நியமிக்கப்பட்டார்.
இதனால் டெல்லி தேமுதிகவை கலைப்பது குறித்து தாம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறி இருந்தார். இந்த நிலையில் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று நேரில் சந்தித்து தட்சிணாமூர்த்தி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அண்மையில் கோவை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆர்.பாண்டியன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். தேமுதிகவில் இருந்து நேற்று நீக்கப்பட்ட மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளார்.
ஏற்கனவே சில மாவட்ட செயலர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.