தேமுதிகவில் போர்க்கொடி ! மாவட்ட செயலர்களுடன் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை ?
சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அக்கட்சியின் மாவட்ட செயலர்களுடன் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேமுதிக தேர்தலை சந்திக்கிறது. இதனால் அதிருப்தியடைந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரக்குமார் தலைமையில் இன்று கூடிய அதிருப்தி எம்.எல்.ஏக்களும், மாவட்ட செயலாளர்களும், விஜயகாந்த் முடிவை கடுமையாக விமர்சனம் செய்தனர். அதோடு நாளை மதியத்திற்குள் திமுகவோடு கூட்டணி வைக்கும் முடிவை தேமுதிக அறிவிக்க வேண்டும் என்றும், விஜயகாந்த் தனது முடிவை பரீசிலிக்க வேண்டும் எனவும் அவர்கள் கெடு விதித்துள்ளனர்.

இதையடுத்து விஜயகாந்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் உட்பட அனைவரும் நீக்கி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நடவடிக்கை எடுத்துள்ளார். தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அனைவரையும் நீக்கி விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் நீக்கப்பட்டுள்ளவர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களை நியமித்து விஜயகாந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில் தேமுதிகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தனது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேமுதிக இரண்டாக உடையும் என செய்திகள் உலாவரும் நேரத்தில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இருப்பினும் தேமுதிக தரப்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எதுவும் நடைபெறுவதாக அறிவிக்கவில்லை எனவும் இது வெரும் வதந்தி இதனை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் கேப்டன் என்ன முடிவை வெளியிட உள்ளார் என அந்த கட்சியினரிடையும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications