வர்ராரு வர்ராரு 'அழகர்' வர்ராரு... பாஸ்கர், பாண்டிகளே உடம்பு பத்திரம்!
சென்னை: விஜயகாந்த் பிரசாரத்திற்குக் கிளம்பப் போகிறார்.. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அவரது பிரசாரத்தில் நடந்த பல்வேறு கூத்துக்களும், கோபங்களும், ஆவேசங்களும் அடியும்தான் நினைவுக்கு வருகின்றன.
கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது பல இடங்களில் தப்புத் தப்பாக பேசி சர்ச்சைக்குள்ளானார் விஜயகாந்த்.
உச்சகட்டமாக தர்மபுரி வேட்பாளரைப் போட்டு சரமாரியாக பொதுமக்கள் முன்னிலையிலேயே அடித்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார். நடிகர் வடிவேலு மறுபக்கம் விஜயகாந்த செய்த தவறுகளை உடனுக்குடன் நையாண்டி செய்து உசுப்பேத்தி விட்டது மறக்க முடியாத அனுபவம்.
கோபப் பேச்சு
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது விஜயகாந்த் பிரசாரம் செய்தபோது அதிமுகவினர் கொடிகளைக் காட்டியபடி நின்றால் உடனே கோபப்பபட்டார். யார் நீ, கொடியை எடு, என்ன பண்றே நீ என்றெல்லாம் கோபமாகப் பேசியதால் அதிமுகவினர் டென்ஷனான சம்பவங்கள் பல நடந்தது.
தப்புத் தப்பாக பேசியதால் சர்ச்சை
பல இடங்களில் விஜயகாந்த்தின் பேச்சில் தவறுகள் தென்பட்டன. இதை யாரும் சுட்டிக் காட்டும் தைரியமும் வராமல் போனதால் தவறாகப் பேசினார் பல இடங்களில் விஜயகாந்த்.
வேட்பாளருக்கு சரமாரி அடி
உச்சகட்டமாக தர்மபுரியில் பிரசாரம் செய்தபோது தனது கட்சி வேட்பாளரின் பெயர் கூட சரியாக தெரியாமல் அவர் பாட்டுக்கு பாண்டி என்று கூறி விட்டார். அதிர்ச்சியான வேட்பாளரோ, நான் பாஸ்கர் அண்ணே, பாண்டி இல்லை என்று கூற இதை முதல்லேயே சொல்ல வேண்டியதுதானடா என்று கூறி வேனுக்குள்ளேயே வைத்து அத்தனை பேர்பார்க்க கையாலும், மைக்காலும் சரமாரியாக அடித்துக் குமுறி விட்டார் விஜயகாந்த்.
நல்லவேளை வடிவேலு இப்ப இல்லை
இந்தத் தேர்தலில் விஜயகாந்ததுக்கு உள்ள ஒரே ஒரு ஆறுதல் நடிகர் வடிவேலு பிரசாரத்தில் இல்லை என்பதே. எனவே வடிவேலு எப்படிக் கிண்டலடிப்பாரோ என்ற பயம் இல்லாமல் தைரியமாக பிரசாரம் செய்யலாம்.
தப்பு செய்யத் தூண்டுவார்கள்.. ஜாக்கிரதை
அதேசமயம், விஜயகாந்த் இன்னொரு விஷத்தில் கவனமாக இருப்பது நல்லது. அதாவது அவராக அவர் கோபப்படுவதில்லை. யாராவது தூண்டி விட்டால்தான் கோபப்பட்டு தாறுமாறாக பேசி விடுகிறார், நடந்து விடுகிறார். இந்த முறையும் அவரை தூண்டி விட்டு தவறு செய்ய வைக்க முயற்சிக்கலாம் எதிர்த்தரப்பினர். அதை பொறுமையோடும், நிதானத்தோடும் எடுத்துக் கொண்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம்.