தமிழகத்தில் 144 தடை அமல்படுத்த டிஜிபியிடம் விஜயகாந்த் மனு!– அவசியமில்லாம போச்சே
சென்னை: தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தக் கோரி தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், டிஜிபியிடம் மனு கொடுத்தார். ஆனால் அதற்கு அவசியமில்லாத வகையில் சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கின் தீர்ப்பு அதிமுகவினருக்கு சாதகமாக வந்துள்ளது.
ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பு சாதகமாகவே வரவே அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். சென்னை போயஸ் தோட்டத்திலும், தலைமை அலுவலகத்திலும் அதிமுகவினர் குவிந்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு பாதகமாக வரும்பட்சத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என்று தமிழகத்தில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டன சென்னையின் அண்ணாசாலை உட்பட பல முக்கிய இடங்களில் சாலைகள் சற்றே வெறிச்சோடியது.
இந்நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்த கோரி எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சார்பில் தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி, டிஜிபியிடம் மனு கொடுத்தார். ஆனால் அதற்கு அவசியமில்லாத வகையில் தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு சாதகமாக வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.