நெல்லை வேட்பாளரை மகாராஷ்டிராவிலிருந்து 'இறக்குமதி' செய்த தேமுதிக!
நெல்லை: நெல்லை தொகுதி தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நபர், கடந்த 20 வருடங்களாக மும்பையில் வசித்து வரும், ரியல் எஸ்டேட்காரர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லையை விட்டு இடம் பெயர்ந்து மும்பைக்குப் போய் பல வருடங்களாக அங்கு செட்டிலாகி விட்டவரைப் பிடித்து நெல்லைக்கு வேட்பாளராக அறிவித்துள்ளார் விஜயகாந்த்.
அந்த இறக்குமதி வேட்பாளரின் பெயர் சிவனைந்த பெருமாள். இவரது பூர்வீகம், நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த கள்ளிக்குளம் அருகே வெங்கடாச்சலபுரம் கிராமம் ஆகும்.
ஆனால் இவர் 20 வருடங்களுக்கு முன்பே மும்பைக்கு இடம் பெயர்ந்து விட்டார். அங்கு தாராவியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கூடவே அச்சகத் தொழிலையும் நடத்தி வருகிறாராம்.
இவரைப் பிடித்துத்தான் தற்போது வேட்பாளராக்கியுள்ளார் விஜயகாந்த். ஆனால் இவர் ஏற்கனவே 2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது ராதாபுரம் தொகுதியில் தேமுதிக சார்பி்ல் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர் ஆவார்.
மும்பை விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவராகவும், மகாராஷ்டிர மாநில தேமுதிக செயலாளராகவும் இவர் இருக்கிறார். இதை வைத்துத்தான் தொடர்ந்து சீட் கொடுத்து வருகிறாராம் விஜயகாந்த்.
ஒருவேளை இந்தி தெரியும் என்பதால் டெல்லிக்கு அனுப்ப வசதியாக இருக்கும் என்று நினைத்து விட்டாரோ கேப்டன்.. அது சரி, நெல்லைக்கான வேட்பாளரை நெல்லையிலேயே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தேமுதிக அங்கு அவ்வளவு பலவீனமாகவா இருக்கு....












Click it and Unblock the Notifications