முதல்வர் ஜெயலலிதா பற்றி பேஸ்புக்கில் அவதூறு: தேமுதிக கவுன்சிலர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேமுதிக நகர செயலாளராக இருப்பவர் சுப்பிரமணி. இவர் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 12வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக சித்தரித்து செய்தி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கடந்த 3 தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதனை அறிந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேட்டுப்பாளையம் அதிமுக நகர செயலாளர் வான்மதிசேட் தலைமையில் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ‘முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேஸ்புக்கில் அவதூறாக செய்தி வெளி யிட்டு அவரது நற்பெயருக்கும் நல்லாட்சிக்கும் களங்கம் விளைவித்த மேட்டுப்பாளையம் தேமுதிக நகர செயலாளர் சுப்ரமணியை கைது செய்ய வேண்டும்‘ என குறிப்பிட்டிருந்தனர்.
அதிமுகவினரின் புகாரை அடுத்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேமுதிக நகர செயலாளர் சுப்ரமணி மீது வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனர். கடந்த 3 நாட்களாக தலைமறைவாக இருந்த சுப்ரமணியத்தை தனிப்படை போலீசார் நேற்று காலை கைது செய்து கோவை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சுப்பிரமணியை 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல், கோவை மாவட்ட அதிமுக தொழிற்சங்க இணை செயலாளர் மைதானம் சந்தானம் என்பவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அவதூறாக பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக நகர அவைத்தலைவர் சோமசுந்தரம் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications