மதுவிலக்கு கோரி கைதான விஜயகாந்த், பிரேமலதா விடுதலை.. தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. வினர் விடுவிப்பு
சென்னை: பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டம் நடத்தி கைதான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதே போன்று பல்வேறு மாவட்டங்களில் கைதான தே.மு.தி.க. வினரும் விடுவிக்கப்பட்டனர்.
மது விலக்கு கோரி இன்று மாலை மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததையடுத்து, அனுமதி கோரி அக்கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வன்முறை ஏற்பட்டால் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜாராக வேண்டும் என எச்சரித்தார்.
பிற்பகலில் மீண்டும் நடைபெற்ற இறுதி விசாரணையில் மனித சங்கிலி போராட்டத்திற்கு நீதிபதி அனுமதி மறுத்தார்.காவல் துறையும், நீதிமன்றமும் அனுமதிக்காத நிலையில், அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் விஜயகாந்த், உட்பட மனித சங்கிலியில் ஈடுபட்டவர்களை இன்று மாலை 4.30 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பிரேமலதா மற்றும் மகளிரணியினரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும், கோயம்பேட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அனுமதியின்றி மனித சங்கிலியில் ஈடுபட்ட தே.மு.தி.க. வினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இரவில் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய தே.மு.தி.க.வினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications