கட்சியில் குடும்ப அரசியல் செய்தால் என்னதான் தப்பு? பிரேமலதா 'பொளேர்'
சென்னை: தேமுதிகவில் நான் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் வெல்லும் சொல் மெய்தேடும் பயணம் என்ற நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2011- ஆம் ஆண்டு வரை விஜயகாந்த் பேச்சு மக்களிடத்தில் சேர்ந்தது. சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து விலை உயர்வு பற்றி விஜயகாந்த் பேசியுள்ளார். ஆனால் விஜயகாந்தின் பேச்சு பற்றி தவறாக சித்தரிக்க வைத்தது அதிமுக தான்.
தற்போது விஜயகாந்துக்கு தைராய்டு பிரச்சனையால் பேச்சில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜயகாந்தின் கொள்கையில் இருந்து அவர் எந்த நிலையிலும் மாறியது இல்லை. யாருடையும் கூட்டணி வைக்காமல் தைரியமாக இறங்கியது விஜயகாந்த் தான்.
மேலும் தேமுதிகவில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்தால் என்ன? என கேள்வி எழுப்பினார். சாதாரண நபர்களை எம்.எல்.ஏ.ஆக்கி அழகு பார்த்த விஜயகாந்துக்கு பலரும் துரோகம் செய்தனர். திமுக குடும்ப உறுப்பினர்களைப் பற்றி நாங்க பேசியது இல்லை. ஸ்டாலின் நீண்டகாலம் திமுகவில் உழைப்பவர். திமுகவினர் ஸ்டாலினை ஏற்றுக் கொண்டால் எங்களுக்கு பிரச்சனை இல்லை. தேமுதிகவில் எங்கள் குடும்பத்தில் சுதீஷைத் தவிர வேறு யாரும் எந்தப் பொறுப்பிலும் இல்லை. தேமுதிகவில் நான் அடிப்படை உறுப்பினர் மட்டுமே இருக்கிறேன் என்று கூறினார்.