கை, காலை உடைப்பேன்.. .தமிழருவி மணியனுக்கு தேமுதிக எம்.எல்.ஏ மிரட்டல்.. வைகோ கண்டனம்!
சென்னை: காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனின் கை, கால்களை உடைப்பேன என்று தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளார். இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழருவி மணியன். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்துக் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் கோபமடைந்த தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி தமிழருவி மணியனை போனில் பிடித்து கடுமையாக எச்சரித்துள்ளார்.
என்ன சொன்னார் தமிழருவி…
செய்தியாளர்களிடம் தமிழருவி மணியன் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு இலவச திட்டங்களை கொடுக்கவேண்டும் என்பதற்காக மதுவிற்பனை செய்வது எந்த விதத்தில் நியாயம்? மதுவினால்தான் இன்றைக்கு பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மதுவிற்பனையை தடை செய்யவேண்டும்.
மதுக் கொடுமை…
22,000 கோடி ரூபாய் வருமானத்திற்காக தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றுவது சரியல்ல. மதுவின் மூலம் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்து வருகின்றனர். சாலை விபத்துகளின் மூலம் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுவது தமிழகத்தில்தான்.
மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டம்
எனவே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்கம் சென்னையில் ஆகஸ்ட் 16ந் தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளது.
பாமக மதிமுகவுக்கு அழைப்பு
மது ஒழிப்புக்காக தனித்தனியாக போராடிவரும் பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து இந்த போராட்டம் நடைபெறும்.
மது வாடை விஜயகாந்த் வேண்டாம்
மதுவின் வாடையே இல்லாத மனிதர்களைத்தான் இந்த போராட்டத்தில் முன்னிலைப்படுத்த முடியும். விஜயகாந்தை முன்னிறுத்தினால் போராட்டத்தின் நம்பகத்தன்மையே போய்விடும் எனவே இந்த போராட்டத்தில் விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கமாட்டோம் என்று கூறியிருந்தார்.
விஜயகாந்த்தின் கனவு பலிக்காது
அதேபோல விஜயகாந்த் குறித்த இன்னொரு கேள்விக்கு தமிழக முதல்வராக வேண்டும் என்ற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதல்வர் கனவு கானல் நீர்தான் என்றும் கூறியிருந்தார்.
பார்த்தசாரதிக்கு வைகோ கண்டனம்
இந்தக் கருத்துக்குத்தான் பார்த்தசாரதி கொந்தளித்துள்ளார். இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மதுவிலக்கு குறித்து கருத்து தெரிவித்தது அவரது ஜனநாயக உரிமை ஆகும்.
தூய எளிய வாழ்வு வாழும் தமிழருவியார்
ஒழுக்கமும், வாய்மையும், அறம்சார்ந்த நற்பண்புகளும் உடைய தமிழருவி மணியன் அவர்கள் தூய்மையான எளிய வாழ்வை மேற்கொண்டு தமிழகத்தின் உயர்வுக்காக போராடி வரும் தலைவர் ஆவார்.
கருத்துச் சுதந்திரம் அடிப்படை நெறி..
ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரம்தான் அடிப்படை நெறியாகும். ஆனால், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி தொலைபேசியில் தமிழருவி மணியன் அவர்களிடம் தரக்குறைவான சொற்களால் ஒருமையில் தமிழருவி மணியன் கை கால் உடைக்கப்படும் என்றும், தமிழ்நாட்டில் எங்கும் தலைகாட்ட விடமாட்டோம் என்றும் மிரட்டிய செயல் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.
கேடு விளைவிக்கும் பார்த்தசாரதி
இத்தகைய போக்கு தமிழகத்தின் அமைதியான பொதுவாழ்வுக்கு கேடு விளைவிப்பதாகும். எனவே, சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதியின் வன்முறை மிரட்டலுக்கு எனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
விஜயகாந்த் கருத்து என்னவோ..
தமிழருவி மணியன் கருத்து குறித்து விஜயகாந்த் இதுவரை எதுவும் பேசவில்லை. கை, கால்களை உடைப்போம் என்று பார்த்தசாரதி பேசியது குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை.
சட்டசபைக்குள் அடித்தவர்களில் ஒருவர்
முன்பு தேமுதிக இரண்டாக பிளவுபட்டபோது சட்டசபைக்குள் வைத்தே அதிருப்தியாளரான சுந்தரராஜனையும், இன்னொருவரையும் சில தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அடித்தனர். அந்த அடியாளர்களில் பார்த்தசாரதியும் ஒருவர் என்பது நினைவிருக்கலாம்.