இந்தாங்க 2671 மனுக்கள்.. நடவடிக்கை எடுக்காவிட்டால்.. கலெக்டருக்கு எம்.எல்.ஏ. எச்சரிக்கை!
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏவான எஸ்.ஆர். பார்த்திபன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நேருக்கு நேர் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பார்த்திபன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர் பகுதி பொதுமக்களிடம் இருந்து பெற்ற 2,617 மனுக்களையும் பெரிய மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு வந்த அவர், அதை மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்திடம் வழங்கி, தன்னிடம் பொதுமக்கள் கொடுத்துள்ள மனுக்கள் இவை. இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார். பின்னர் ஒரு மாத காலத்திற்குள் இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் அவர் கலெக்டருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மேட்டூர், எம்.எல்.ஏ., வாக மூன்று ஆண்டுகளை கடந்து விட்டேன். பொதுமக்களை சந்திக்க செல்லுமிடங்களில் என்னிடம் கொடுக்கபப்ட்ட மனுக்களை பெற்று அவற்றை பிரித்து, ஒவ்வொரு துறைக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டு அதிகாரிகள் வசம் கொடுத்துள்ளேன்.
இதில், அதிகாரிகள், 50 சதவீதம் பணிகளை மட்டுமே முடித்து கொடுத்துள்ளனர். மீதம், 50 சதவீதம் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொளத்தூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்களை நேரடியாக சந்தித்தேன். அப்போது, பட்டா மாற்றம் கோரியும், முதியோர் உதவி தொகை கோரியும், மாற்று திறனாளிகளுக்கான சலுகை கேட்டும் நிறைய பேர் மனு வழங்கினர். பொதுமக்கள் என்னிடம் வழங்கிய மனுக்களை, வரிசைப்படுத்தி கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளேன். மனுக்களையும் ஒரு நகல் எடுத்தும் வைத்துள்ளேன்.
நான் கொடுத்துள்ள மனுக்கள் மீது 30 நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும். எம்.எல்.ஏ., என்ற முறையில், நான் நேரடியாக வந்து மனுக்களை வழங்கியுள்ளேன். மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால் 31 வது நாள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அவரது அறையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார் பார்த்திபன்.
தேமுதிக எம்.எல்.ஏவின் இந்த எச்சரிக்கையால் சேலத்தில் பரபரப்பு நிலவுகிறது.