'ஆபரேசன் ஸ்டாலின்' ஆரம்பம்: தேமுதிக வடசென்னை மா.செ யுவராஜ் திமுகவில் இணைந்தார்
சென்னை: வட சென்னை தேமுதிக மாவட்ட செயலர் யுவுராஜ், அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட போது பொருளாளர் மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார்.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவை இழுத்து பலமான கூட்டணி அமைக்க முயற்சி செய்தது திமுக. பல கட்ட பேச்சுவார்த்தைகளை ரகசியமாக நடத்தியது. ஆனால் தேமுதிகவோ மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்து விட்டது.
இது திமுகவை மட்டுமல்ல தேமுதிக நிர்வாகிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே தேமுதிக நிர்வாகிகள் திமுகவுக்கு தாவி வருகிற நிலை உருவாகியுள்ளது.
மதிமுக மாவட்ட செயலாளர்களை வளைத்தது போல தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் பலரை தங்கள் பக்கம் இழுக்க 'ஆபரேசன் ஸ்டாலின்' ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். முதலாவதாக மாட்டியிருப்பவர் வடசென்னை மா.செ. யுவராஜ் என்கின்றனர்.

முதல் மா.செ யுவராஜ்
சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு சென்ற வடசென்னை தேமுதிக மாவட்ட செயலாளர் யுவராஜ், கருணாநிதியின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைந்து கொண்டார்.

இணைந்தது ஏன்?
வடசென்னையில் பரவலாக செல்வாக்கு பெற்றுள்ள யுவராஜ் திமுகவில் இணைந்தது பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக எடுத்த முடிவு தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. செயலற்ற அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும், அதற்காக திமுகவுடன் கூட்டணி அமைப்பதே சிறந்தது என்றும் கருதினோம். தொண்டர்களின் விருப்பமும் அதுவாக இருந்தது.

ஏமாற்றம் அளித்த விஜயகாந்த்
விஜயகாந்த் திமுக உடன் கூட்டணி சேராமல் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தது எங்களை போன்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது கூட்டணி முடிவு எங்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

நிறைய பேர் வருவார்கள்
விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தது ஏன்? என்று எனக்கு காரணம் தெரியாது. அவரது இந்த முடிவு அதிமுகவிற்கு சாதகமாக அமையும். என்னை போன்ற பெரும்பாலான தொண்டர்களும் தேமுதிகவில் இருந்து திமுகவிற்கு வரும் எண்ணத்தில் உள்ளனர்.

நாங்கள் தயாராக இல்லை
அதிமுக ஆட்சியில் தேமுதிகவினர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த ஆட்சியை வீழ்த்த சரியான கூட்டணி அமைக்காத விஜயகாந்த்தின் பின்னால் இனியும் செல்ல நாங்கள் தயாராக இல்லை. அதனால் திமுகவிற்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார் யுவராஜ்.

இழுக்கும் படலம் துவக்கம்
வடசென்னையில் பிரபலமாக உள்ள யுவராஜ், 2014-ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார். இன்று திடீரென்று திமுகவில் இணைந்துள்ளார். இதன் மூலம் தேமுதிக மாவட்ட செயலர்களை திமுகவில் இழுக்கும் படலம் துவங்கிவிட்டது.

சேலம் தேமுதிகவினர்
இதே போல் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த தே.மு.தி.க.வினர் 130 பேர், ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் அறிவாலயம் சென்று இன்று திமுகவில் இணைந்தனர்.

18மா.செக்கள், 11 எம்.எல்.ஏக்கள்
திமுக உடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அதிருப்தியில் உள்ள தேமுதிகவினரிடம் தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். தேமுதிகவில் இருந்து 18 மாவட்ட செயலாளர்கள், 11 எம்.எல்.ஏக்களை தங்கள் வசம் இழுக்க வேண்டும் என்று பலருக்கும் திமுகவில் இருந்து அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மாநிலம் முழுவதும்
சென்னையில் தொடங்கியுள்ள ஆபரேசன் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும். விரைவில் கட்சித்தாவும் படலம் ஆரம்பமாகும் என்கின்றனர். அதே நேரத்தில் தேமுதிகவில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் எம்.எல்.ஏ சீட் கொடுக்க முடியாது. கட்சிப்பதவியும் கரன்சியும் மட்டும்தான் என்ற உறுதி மொழி கொடுக்கப்படுவதாகவும் கோபாலபுர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபரேசன் சக்சஸ்... பட் பேசன்ட் டெட் ஆகாமல் இருந்தால் சரிதான்!












Click it and Unblock the Notifications