குடிக்காதீங்க மக்களே... குடி பிரியர்களின் காலில் விழுந்து தேமுதிகவினர் நூதனப் போராட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மதுப்பழக்கத்தை விட்டுவிடக் கோரி குடிகாரர்கள் காலில் விழுந்து தேமுதிகவினர் நூதன முறையில் போராட்டம் மேற்கொண்டனர்.
கடந்த வாரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி மார்த்தாண்டம் அருகே செல்போன் டவரில் ஏறிப் போராடிக் கொண்டிருந்த காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

பூரண மதுவிலக்கு குறித்த உறுதி அளித்தால் மட்டுமே சசிபெருமாள் உடலைப் பெறுவோம் எனக் கூறி அவரது குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் தேமுதிகவினர் நேற்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேமுதிக விழுப்புரம் மாவட்ட மாணவரணி செயலாளர் சுந்தரேசன் தலைமையில் கூட்டேரிப்பட்டில் உள்ள மதுக்கடை முன்பு திரண்ட தேமுதிகவினர், முதலில் சசிபெருமாள் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்கள் வாங்க வந்த குடி பிரியர்களின் காலில் விழுந்து, ‘குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கெஞ்சி கேட்கத் தொடங்கினர்.
இந்த நூதன போராட்டத்தில் மயிலம் ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் பொய்யாது, மாவட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், லட்சுமிநாராயணன், துளசி, ஒன்றிய துணை செயலாளர் பெருமாள், தொண்டரணி அமைப்பாளர் சிவசங்கர், நிர்வாகி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த காந்தியவாதி சசிபெருமாளும் இதே போன்று குடிபிரியர்களின் கால்களில் விழுந்து, குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு கேட்டு போராட்டம் நடத்தியவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications