தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் சில தொகுதிகள் மாற்றம்
சென்னை: முதுகுளத்தூர், மன்னார்குடி, கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய நான்கு தொகுதிகளை தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் தங்கள் கட்சிகளுக்குள் மாற்றிக் கொண்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. தேமுதிக 104 தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளிலும் தமாகா 26 தொகுதிகளிலும், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

தொகுதிப்பங்கீடுகள் முடிவடைந்து,யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்ற பேச்சுவார்த்தையும் முடிவடைந்து விட்டது. தேமுதிகவின் வேட்பாளர் பட்டியலும் பல கட்டங்களாக வெளியாகி வருகிறது. மதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரின் ஒப்புதலுடன் கீழ்கண்ட தொகுதிகள் மாற்றிக்கொள்ளப்பட்டன.
ஏற்கெனவே செய்துகொண்ட உடன்பாட்டின்படி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த முதுகுளத்தூர் (212) சட்டமன்ற தொகுதி மதிமுகவிற்கும், மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த மன்னார்குடி (167) சட்டமன்ற தொகுதி தேமுதிகவிற்கும் மாற்றிக் கொள்ளப்பட்டன.
தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி (080) சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த திண்டிவனம் (072) தொகுதி தேமுதிகவிற்கும் மாற்றிக் கொள்ளப்பட்டன.












Click it and Unblock the Notifications