நாமக்கல்லில் தேமுதிகவுக்கு திடீர் சிக்கல்.. சுகவீனத்தால் வேட்பாளர் போட்டியிட மறுப்பு!
நாமக்கல்: நாமக்கல் தொகுதிக்கான தேமுதிக வேட்பாளர் மகேஸ்வரனுக்கு திடீரென உடல் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தான் போட்டியிட இயலாது என்றும் மகேஸ்வரன் கூறியுள்ளதால் வேட்பாளரை மாற்ற வேண்டிய நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளது.
விஜயகாந்த் பிரசாரத்திற்குக் கிளம்புவதற்கு முன்பு ஐந்து தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்தது தேமுதிக. அதில் ஒரு தொகுதிதான் நாமக்கல். அதன் வேட்பாளராக மகேஸ்வரன் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இன்று நாமக்கல்லில் மகேஸ்வரனை ஆதரித்துப் பிரசாரம் செய்யவுள்ளார் விஜயகாந்த். ஆனால் திடீரென மகேஸ்வரனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்சி மேலிடத்திற்கு மகேஸ்வரன், தான் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாராம். தான் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளதால் தன்னால் போட்டியிட முடியாது என்றும் மகேஸ்வரன் தெரிவித்துள்ளாராம்.
இதையடுத்து நாமக்கல் தேமுதிக வேட்பாளராக வேறு ஒருவரை விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார். இன்றைய பிரசாரத்தின்போது புதிய வேட்பாளரை விஜயகாந்த் அறிவிக்கலாம் என்று தெரிகிறது.