”எதிரிகளை மன்னிச்சுருவோம, ஆனால் துரோகிகளுக்கு மன்னிப்பே இல்லை” - பிரேமலதா பிரச்சாரம்
கடலூர்: பிரேமலதா விஜயகாந்த், தன்னுடைய கடலூர் பிரச்சாரத்தின் போது எதிரிகளுக்கு மன்னிப்பு உண்டு துரோகிகளுக்கு கிடையாது என்று கூறியுள்ளார்.
தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா நேற்று கடலூரில் பிரசாரம் செய்தார். கடலூர் தேமுதிக வேட்பாளரான ஜெயசங்கரை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.
அதில் பேசிய அவர், ‘'நான் உங்கள் வீட்டு பெண்ணாக கடலூர் தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து தமிழகத்திலேயே முதல் தொகுதியாக கடலூர் தொகுதியை மாற்ற வேண்டும் என்பதற்காக உங்களிடம் பேச வந்துள்ளேன்.

கடலூருக்கு வந்த ஜெயலலிதா அதிமுகவை தவிர மற்ற கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் அந்த வாக்கு வீணாக போய்விடும் என்று பேசியிருக்கிறார். நான் அவரிடம் கேட்கிறேன் நீங்கள் முதலில் எந்த அணியில் இருக்கிறீர்கள் என்று மக்களுக்கு தெரிவிக்க தயாரா? தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தின் முதல்வர். அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதேபோல நீங்களும் தேர்தலில் போட்டியிட தயாரா?
கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். கடந்த திமுக ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் 2 அமைச்சர்கள் இருந்தும் மாவட்டத்தில் முன்னேற்றம் அடையவில்லை. இதனால் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.
அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து வந்து அவைத்தலைவர் பதவியை கொடுத்து சட்டசபையில் தன் அருகிலேயே இருக்கை கொடுத்தார் கேப்டன். ஆனால் அவர் செய்த நன்றிகடன் என்னவென்று உங்களுக்கு தெரியும். எதிரிகளுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது.
தமிழ்நாட்டில் சரித்திரம் படைக்க போகும் கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. இது இரட்டை குழல் துப்பாக்கி போன்றது. நம்மிடம் ஜாதி, மதம், இனம் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. இதை மனதில் கொண்டு நீங்கள் தேர்தலில் தேனீக்களை போன்று கடுமையாக உழைத்து மாபெரும் வெற்றி சரித்திரத்தை படைக்க வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications