கடவுளின் அருள்… மக்களின் ஆசியோடு 2016ல் தேமுதிக ஆட்சிதான்: பிரேமலதா
சென்னை: கடவுளின் அருளாளும், மக்களுடைய ஆதரவாளும் 2016ல் நம்முடைய தலைவருடைய ஆட்சி தமிழகத்தில் அமையத்தான் போகிறது என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மக்களுக்காக மக்கள் பணி' என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் சென்னை மறைமலை நகரில் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், நலத்திட்டங்களும் வழங்கப்பட்டன. விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதுதான் ஹைலைட் ஆக அமைந்தது.

அமைதிதான் பதிலா
அனைத்து எதிர்க்கட்சிகளும் மது வேண்டாம் என்று போராடுகிறார்கள். மது பிரச்சனைக்காக பெண்கள் போராடுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் போராடுகிறார்கள். பொதுமக்கள் போராடுகிறார்கள். மாணவர்கள் போராடுகிறார்கள். ஆனால் எதற்குமே எந்த பதிலும் கூறாமல் அமைதியாக மவுனத்தை மட்டுமே பரிசாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஜெயலலிதா கொடுக்கிறார். இது உண்மையிலேயே வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பாடம் புகட்டுவோம்
ஒரு ஆளும் கட்சி என்ன செய்யவேண்டும். மக்களுக்கு என்ன தேவை. எதிர்க்கட்சிகள் என்ன சுட்டிக்காட்டுகிறது, அதனை உடனடியாக செய்யவேண்டும் என்பதுதான் நல்ல ஆட்சி. மக்கள் தெளிவு பெற வேண்டும். அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

வெட்கக் கேடு
மோடி வந்து உங்களை பார்த்தார் உடல்நிலை சரியில்லை என்று சொன்ன நீங்க ஏன் ஏர்போர்ட் போனீங்க. நமது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் இறுதி சடங்கில் வந்து நீங்க கலந்து கொள்ளவில்லை என்றால் இதைவிட வெட்கக் கேடு என்ன இருக்கு. அமைச்சர்கள் 7 பேரை அனுப்பினால் கணக்காயிடுமா.

பயம் வந்துருச்சே
மோடியை வரவேற்றீர்கள். பிரதமரை முதல்வர் வரவேற்றார் அதனால் அதற்குள் நாங்கள் வரவில்லை. ஏன் அப்துல் கலாம் இறுதி சடங்குக்கு வரவில்லை. விஜயகாந்த் சென்றார். அவருக்கு பெயர் வந்துவிட்டது என்று ஜெயலலிதாவுக்கு பயம். அப்துல் கலாம் பிறந்த நாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று ராமேஸ்வரத்தில் இறுதி சடங்கு நடக்கிற இடத்திலேயே பிரதமரிடம் கடிதம் கொடுத்தார் விஜயகாந்த். பிரதமரும் ஆவண செய்கிறேன் என்று சொன்னார்.

இளைஞர் எழுச்சி நாள்
உடனே இந்த அம்மா எங்க தன்னுடைய மகுடம் இறங்கிடுமோ என்று, இளைஞர் எழுச்சி நாள் என்று சொல்லி சம்மந்தமே இல்லாத ஒரு நாளை அறிவிக்கிறார். ஜனவரி 14ஆம் தேதி இளைஞர்களுடைய எழுச்சி நாளாக விவேகானந்தர் தினத்தை ஏற்கனவே கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். 10 இளைஞர்களை கொடுங்கள் உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்று சொன்னவர். அவருக்கு இளைஞர் எழுச்சி நாள் சரி. ஆனால் மாணவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒருவருக்கு எப்படி இளைஞர் எழுச்சி நாள் பொருந்தும்.

அமைச்சர்களின் யோகா
யோகா நிகழ்ச்சி தேமுதிக சார்பில் நடத்தினோம். அதனை சிலர் கிண்டல் செய்தனர். ஆனால் அதைவிட ஒரு பெரிய யோகா அதிமுக அமைச்சர்கள் தினமும் செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன தெரியுமா. நாற்காலியே இல்லாம உட்காருகின்ற ஒரே ஆட்கள் அதிமுக அமைச்சர்கள் மட்டுதான். நாற்காலியே இருக்காது. ஆனால் அரை மணி நேரம் நாற்காலி உட்கார்ந்தமாரியே செய்கிற ஒரே யோகா வித்தையை கற்றவர்கள் அதிமுக அமைச்சர்கள்.

2016ல் தேமுதிக ஆட்சிதான்
நிச்சயமாக பொறுத்திருந்து பாருங்கள். கடவுளின் அருளாளும், மக்களுடைய ஆதரவாளும் 2016ல் நம்முடைய தலைவருடைய ஆட்சி தமிழகத்தில் அமையத்தான் போகிறது என்றார்.












Click it and Unblock the Notifications