தேமுதிகவை கலைக்கவில்லை, அதெல்லாம் வதந்தி... வி.சி.சந்திரகுமார்
ஈரோடு: விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர் என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. 2016 சட்டசபைத் தேர்தலில் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும், விஜயகாந்த் முதல்வர் ஆவார். தேமுதிகவை கலைக்கப் போவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தியே என்று தேமுதிக சட்டசபை துணைத் தலைவர் வி.சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.

ஈரோடு குமலன் குட்டை முருகேசன் நகர் பகுதியில் கிழக்கு தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வான சந்திரகுமார் தொகுதி நிதியிலிருந்து ரூ.6 லட்சம் செலவில் புதிதாக ரேசன் கடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் சந்திரகுமார் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்று நாங்கள் கூறி வருகிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. வருகிற 2016 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தேமுதிக ஆட்சியை பிடிக்கும்.
தேமுதிக கலைப்பு என்ற செய்தி முற்றிலும் கற்பனையான ஒன்று. இதில் எந்த உண்மையும் இல்லை. திமுக - அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக விளங்கி வருகிறது. விரைவில் விஜயகாந்த் தலைமையில் தமிழகத்தில் தேமுதிக ஆட்சி மலரும்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு விஜய்காந்த் எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அறிக்கை விட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கும் தலைவர் கடிதம் எழுதி உள்ளார். பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தேமுதிக ஏற்றுக்கொள்ளாது என்றார் சந்திரகுமார்.












Click it and Unblock the Notifications