நெல்லையில் தேமுதிக, மதிமுக, பாமகவுக்கு வந்த பெரும் தொல்லை... டோட்டல் "வாஷ் அவுட்"!
சென்னை: நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில், போட்டியிட்ட 144 வேட்பாளர்களில் 20 பேரைத் தவிர மற்ற 124 பேரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
அதாவது ஒவ்வொரு தொகுதியிலும் முதல் இரு இடங்களைப் பிடித்தவர்களைத் தவிர மற்ற அத்தனை பேரும் கூண்டோடு கைலாசமாகியுள்ளனர்.
தென் மண்டலத்தின் முக்கிய மாவட்டம் நெல்லை. இங்கு 10 தொகுதிகள் உள்ளன. இங்கு திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக, சிபிஎம், நாம் தமிழர் என பல்வேறு கட்சிகளும் களம் கண்டன.
மொத்தம் 144 பேர் அண்ணாச்சி
மொத்தம் 144 வேட்பாளர்கள் இந்த பத்து தொகுதிகளிலும் களம் கண்டனர். இதில் வெற்ற பெற்ற 10 பேர் மற்றும் 2வது இடத்தைப் பிடித்த பத்து பேர் என மொத்தம் 20 பேருக்கு மட்டும்தான் டெபாசிட் தொகை கிடைத்துள்ளது.
124 பேர் வாஷ் அவுட்!
மீதமுள்ள 114 வேட்பாளர்களுக்கும் டெபாசிட் போய் விட்டது. இதில் என்ன கொடுமை என்றால் தேமுதிக, பாமக, மதிமுக, நாம் தமிழர், பார்வர்ட் பிளாக், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், சிபிஎம் என பல கட்சிகளைச் சேர்ந்த ஒருவருக்கும் டெபாசிட் கிடைக்கவில்லை. மொத்தமாக வாஷ் அவுட் ஆகி விட்டது.
திமுக - அதிமுக மட்டும் தப்பியது
முக்கியக் கட்சிகளில் திமுக, அதிமுக மட்டும்தான் டெபாசிட்டைத் திரும்பப் பெற்ற கட்சிகளாகும். மற்றவர்களுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை.
எங்கெங்கு எத்தனை பேர்?
நெல்லை தொகுதியில் 15 பேர், பாளையங்கோட்டையில் 12, ராதாபுரத்தில் 13, ஆலங்குளத்தில் 10, அம்பாசமுத்திரத்தில் 17, நாங்குநேரியில் 14, வாசுதேவநல்லூரில் 8, சங்கரன்கோவில் தொகுதியில் 13, கடையநல்லூரில் 13, தென்காசியில் 9 பேரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
அள்ளி எடுத்த நோட்டா
நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் நோட்டாவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 22,897 வாக்குள் நோட்டாவுக்குக் கிடைத்துள்ளன. அதிகபட்சமாக தென்காசியில் 3391 வாக்குகள் பதிவானது.