நம்பிக்கை வாக்கெடுப்பு: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு
இன்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: நாளை நடைபெற உள்ள சட்டசபைக் கூட்டத்தில் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவி ஏற்றார். அவர் நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதற்கான கூட்டத்தில் திமுக அவரை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நாளை நடக்க உள்ள பெரும்பான்மை வாக்கெடுப்பு குறித்தும், சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து திமுக எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வர வேண்டும் என்றும் தலைமை எடுக்கும் முடிவிற்கு திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.