4 தொகுதி இடைத்தேர்தல்... அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு (புதுச்சேரி) ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் திமுக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது.
தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும் புதுவை நெல்லித்தோப்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டது.
அதன்படி அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். திருப்பரங்குன்றத்திலும் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.போஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திமுக சார்பில் போட்டியிடும் அரவக்குறிச்சி வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி, தஞ்சை வேட்பாளர் அஞ்சுகம், ஆகியோரும் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் ஓம்சக்தி சேகர் இன்று தட்டாஞ்சாவடி தொழில் வர்த்தகத்துறை அலுவலகத்துக்கு தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று தேர்தல் அதிகாரி மலர்கண்ணனிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். புதுச்சேரியைப் பொருத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பதால் புதுச்சேரி முதல்வரும் நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான நாராயணசாமியும் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.