காவேரி மருத்துவமனையில் திடீரென குவிக்கப்பட்ட அதிரடிப்படையினர்.. கலக்கத்தில் தொண்டர்கள்
காவேரி மருத்துவமனை முன்பு திடீரென 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
சென்னை: காவேரி மருத்துவமனை முன்பு திடீரென 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
கருணாநிதியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக நேற்று அறிக்கை வெளியிட்டது. மேலும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள தொண்டர்கள் நேற்று மாலை முதலே மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். தலைவா எழுந்து வா என அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.
சாலை மூடல்
நேற்று இரவே 200க்கும் மேற்பட்ட போலீசார் காவேரி மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மருத்துவமனைக்கு செல்லும் ஒரு பக்க சாலையும் மூடப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
காலை முதல் காவேரி மருத்துவமனை முன்பு 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிரடிப்படை குவிப்பு
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென அதிரப்படையினர், போலீசார் என 500க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டர்கள் கலக்கம்
கருணாநிதி உடல் எந்த மருத்துவ சேவைக்கும் ஒத்துழைக்கவில்லை என தகவல் வெளியாகி வரும் நிலையில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வருடன் திடீர் சந்திப்பு
இதனிடையே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அழகிரி உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்திருப்பதும் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.