அதிமுக பாணியில் கோவில் கோவிலாக பூஜையில் இறங்கிய திமுகவினர்!
சென்னை: அதிமுக பாணியில் கோவில் கோவிலாக பூஜையில் குதித்துள்ளனர் திமுகவினர். திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டி கோவில்களில் திமுகவினர் சிறப்பு பூஜைகளில் இறங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அதிமுகவினர் நடத்திய பூஜைகளை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை. கோவில் கோவிலாக பூஜைகள் களை கட்டியிருந்தன.
மண் சோறு சாப்பிடுவது, கோவில்களில் காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்துதல், பூக்குழி இறங்குதல் என அதிமுகவினர் வழிபாடுகள் உள்ளிட்ட பிரார்த்தனகளில் ஈடுபட்டனர்.
தற்போது திமுகவினரும் அதே வழியில் இறங்கியுள்ளனர். சென்னையில் ஒரு கோவிலில் திமுக தொண்டர்கள் கூடி வெறும் கையில் திரி வைத்து விளக்கேற்றி சாமி கும்பிட்டு வழிபாடு நடத்தியுள்ளனர்.
கோடம்பாக்கத்தில் உள்ள ஏரிக்கரை மாரியம்மன் கோவிலில்தான் இந்த காட்சியைக் காண முடிந்தது. அங்கு பெண்கள் உள்ளிட்ட பலர் கூடி கையில் விளக்கேந்தி திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று அம்மனிடம் உருக்கமாக கோரிக்கை வைத்தனர்.