செந்தில்பாலாஜி இல்லையென்றால் என்ன? அதான் நாங்க இருக்கோம்ல! கரூரில் மாஸ் காட்டிய திமுகவினர்!
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கரூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை திட்டமிட்டபடி நடத்தி மாஸாக கூட்டத்தை திரட்டிக் காட்டியிருக்கிறார்கள் லோக்கல் திமுகவினர்.
கடந்த மார்ச் 23ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் போது, கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஜூன் 3 2023 முதல் ஜூன் 3 2024 வரை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியிருந்தது.

அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான சார்ட் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில் ஜூன் 27ஆம் தேதி சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத்தை அழைத்து கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
ஆனால் அதற்குள் ரெய்டு, கைது, அறுவைச் சிகிச்சை என அமைச்சர் செந்தில்பாலாஜி சோதனை மேல் சோதனைகளை சந்தித்ததால், கரூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.
இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருக்கின்ற போதும், கூட்டத்தை ரத்து செய்யாமல் நடத்திக் காட்டியிருக்கிறார் கரூர் மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன். செந்தில்பாலாஜி கலந்துகொண்டால் எந்தளவு கூட்டம் வந்திருக்குமோ அதேயளவு கூட்டத்தை திரட்டியிருந்தனர் உள்ளூர் திமுக நிர்வாகிகள்.
கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்திவிட்டு அதில் கருணாநிதியை பற்றி பேசியதை காட்டிலும் அமைச்சர் செந்தில்பாலாஜியை பற்றியும் அமலாக்கத்துறை பற்றியுமே அதிகம் பேசப்பட்டன.












Click it and Unblock the Notifications