கருணாநிதி வீட்டிற்குள் ரஜினியை அனுமதித்து இருக்க கூடாது.. தற்சார்பு விவசாயிகள் சங்கம் சீற்றம்
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ரஜினிக்கு அனுமதி அளித்து இருக்ககூடாது என்று விமர்சனங்கள் எழுந்து உள்ளது.
ஈரோடு : கருணாநிதியை சந்திக்க சென்ற ரஜினியை கோபாலபுரம் வீட்டிற்குள்ளே அனுமதித்து இருக்கவே கூடாது என்று தமிழக தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே. பொன்னையன் குறிப்பிட்டு உள்ளார்.
அரசியலுக்கு வருவது குறித்து முடிவை அறிவிக்க 25 ஆண்டுகளாக இழுத்து கொண்டு இருந்த ரஜினி, சமீபத்தில் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
ரசிகர்களை ஒருங்கிணைக்க புதிய இணையதளம், ரசிகர் மன்றத்தை பலப்படுத்துவது, பத்திரிகையாளர்களை சந்திப்பது, மூத்த அரசியல் தலைவர்களிடம் ஆசி பெறுவது என அதற்கு அடுத்த அனைத்து விஷயத்தையும் வேகமாக செய்து வருகிறார்.
கருணாநிதியோடு சந்திப்பு
வருகிற பொங்கலன்று தனிக்கட்சி அறிவிப்பும், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்தார். அப்போது தனிக்கட்சி தொடங்க போவதாகவும், அதற்கு ஆசி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இன்று அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் ரஜினி.
ரஜினி கொள்கை என்ன ?
இந்நிலையில், ரஜினி கருணாநிதியை சந்தித்தது குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்து உள்ளது. இதுகுறித்து தமிழக தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வெ.பொன்னையன் கூறுகையில், ரஜினி - கருணாநிதி இருவரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டும் தான் அவர்களுக்குள்ளான ஒற்றுமை. திராவிட இயக்கத்தின் கொள்கைகள், சமூக நீதி கோட்பாடு, அரசியல் வேறு. அதற்கு நேரதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ரஜினிகாந்த். தன்னுடைய கொள்கையாக ஆன்மிக அரசியல் என்று எதையோ சொல்லி வருகிறார். அப்படி ஒரு அரசியலே இல்லை.
அனுமதித்து இருக்க கூடாது
வாய்க்கு வந்ததை சொல்லிக்கொண்டாலும், மதவாத அரசியல் பாதை தான் அவரது வழியாக இருக்கும். பாஜக தலைவர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளிப்பதிலேயே இந்த விஷயம் நன்கு தெரிகிறது. ஒரு முக்கிய நடிகர் எதோ பிறந்தநாள், திருமணநாளுக்கு வாழ்த்து பெற போகிறார் என்றாலோ அல்லது உடல்நிலை முடியாமல் இருக்கும் கருணாநிதியை நலம் விசாரிக்க செல்கிறார் என்றாலோ சந்திக்க அனுமதி அளித்து இருக்கலாம். ஆனால், அவரோ தனிக்கட்சி தொடங்க போவதாக கலைஞரிடம் வாழ்த்து பெற போய் இருக்கிறார். இதை எப்படி ஸ்டாலினும், கருணாநிதியின் குடும்பத்தினரும் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.
திமுக தொண்டர்கள் குழப்பம்
ரஜினி கட்சி ஆரம்பித்தால் மற்ற கட்சிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், திமுக மற்றும் அதிமுகவிற்கு நிச்சயம் பிரச்னை ஏற்படும். அதிமுக உட்கட்சி பிரச்னையால் அங்கேயே நிறைய குளறுபடிகள். திமுக அப்படி அல்ல; கட்டுக்கோப்பாக இயங்கி வருகிறது. அதை குலைத்து, தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் படியான செயலை ரஜினி செய்து இருக்கிறார். இதை கருணாநிதி புரிந்து கொள்ளும் நிலையில் இருந்தாரா என்பது தெரியவில்லை. அவர் நிச்சயம் இந்த சந்திப்பை விரும்பி இருக்கமாட்டார்.
ரஜினியிடம் எச்சரிக்கை தேவை
ரஜினியின் அரசியலில் எந்த புதுமையும் இருக்க போவது இல்லை. இத்தனை நாட்களாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க செய்ததை அவர் தமிழகத்தில் செய்ய போகிறார். ஏற்கனவே, ஆர்.கே நகர் தேர்தலின் போது பிரதமர் மோடி சந்தித்து விட்டு சென்றார். இதனால் அங்கு டெபாஸிட் போனது. இப்போது ரஜினி வந்து சென்றிருக்கிறார். எனவே, திமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.