காவிரி மருத்துவமனைக்கு வந்த சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம்.. பரபரப்பு
Recommended Video
சென்னை: காவிரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
இதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கருத்து வெறுப்பு வேறு, மனித வெறுப்பு வேறு. மனித மாண்பு என்று ஒன்று உள்ளது.
கருத்து வேறுபாடு இருந்தாலும், வாஜ்பாய், சோனியா காந்தி, அத்வானி சேர்ந்து இருந்து, டீ குடித்தபடி விவாதிக்கிறார்கள். கேரளாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் மக்கள் நலனுக்காக பேசுகிறார்கள்.
காயப்படுத்த கூடாது
பிறரை காயப்படுத்தி மகிழ்வது சரியில்லை. அது கூடாது என்று தடுக்க நினைக்கிறோம். எல்லோருமே முழு அரசியல் புரிதலோடு வருவார்கள் என தெரியாது. அதை மாற்ற வேண்டும். எனவேதான், கருணாநிதியென்று இல்லை யாரை பற்றியும் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்ய கூடாது என நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன் என்றார்.
கனிமொழிக்கு திறமை உள்ளது
மதுரை ஆதீனம் கனிமொழி குறித்து தெரிவித்த கருத்து பற்றிய கேள்விக்கு, "கனிமொழியிடம் ஆளுமை உள்ளது. நினைவாற்றல் உள்ளது. இலக்கியம் அறிந்தவர், நினைத்ததை துணிந்து பேசும் தைரியம் உள்ளது. ஒரு பெண்ணாக நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவர். ஸ்டாலினுடன் அவர் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற மதுரை ஆதீனத்தின் கருத்துடன் நானும் ஒத்துப்போகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
சீமானுக்கு எதிர்ப்பு
இதனிடையே, காவிரி மருத்துவமனைக்கு வருகை தந்த சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வெளியே சென்றபோது, மருத்துவமனை வாசலில் குழுமியிருந்த திமுக தொண்டர்கள் சீமான் ஒழிக என்று கோஷம் எழுப்பினர்.
வைகோ நிலை
முன்பு ஒருமுறை காவிரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டபோது அவரை பார்க்க சென்ற வைகோவை வாசலிலேயே வைத்து திமுக தொண்டர்கள் விரட்டியடித்தனர். அப்போது ஸ்டாலினை மறைமுகமாக வைகோ குற்றம்சாட்டி பேட்டியளித்திருந்தார். இப்போது திமுகவுடன் சமரசமாகி வைகோ இணைந்து செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.