வைகோ இப்படிப் பேசுகிறார், ராமதாஸும் கூட்டணி இல்லை என்கிறார்.. திமுக சந்தோஷம் மாயையா?
சென்னை: திமுக கூட்டணி குறித்து இன்னும் சிந்திக்கவே இல்லை என்று கூறியுள்ளார் வைகோ. அதேசமயம், திமுக, அதிமுக இல்லாமல் ஒரு கூட்டணியை பாமக உருவாக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இதனால் திமுகவின் கல்யாண வீட்டு சந்தோஷம், கரைந்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கல்யாண வீடுகளில் அரசியல் தலைவர்கள் சந்திப்பது, பேசுவது என்பது அரசியல் நாகரீகம் சம்பந்தப்பட்டவை. அதை வைத்து கூட்டணி என்று முடிவு செய்து விடக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியிருந்தார்.
அவர் கூறியது கிட்டத்தட்ட உண்மையாகி விடுமோ என்று தெரிகிறது. காரணம், சமீபத்தில் டாக்டர் ராமதாஸின் பேரன்- பேத்தி கல்யாணத்தின்போது ராமதாஸ் - வைகோ - மு.க.ஸ்டாலின் ஆகியோரது சந்திப்பும், புன்னகையும், பேச்சுக்களும், அதற்கு திமுக தலைவர் கருணாநிதி கூறிய கருத்துக்களும், திருமண விழாவின்போது அவர் பேசிய பேச்சும் தமிழகத்தையே பரபரப்பில் மூழ்கடித்தன.
மீண்டும் ஒரு மெகா கூட்டணியை திமுக அமைக்கப் போகிறது என்ற பேச்சுக்களும் கொடி கட்டிப் பறந்தன. ஆனால் இப்போது வைகோவும், டாக்டர் ராமதாஸும் வேறு தொனியில் பேச ஆரம்பித்திருப்பதால் இந்த கல்யாண வீட்டு சந்தோஷம் கரையத் தொடங்கி விட்டதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

கல்யாண வீ்ட்டில் சங்கமித்த திமுக -பாமக - மதிமுக
சமீபத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸின் மகள் திருமணம் நடந்தது. இதில் திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டனர். இவர்களின் வருகையால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பெரும் சந்தோஷத்துடன் காணப்பட்டார்.

கை குலுக்கல்கள்.. புன்சிரிப்புகள்
திருமண வரவேற்பின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நேரில் சந்தித்துக் கொண்டனர். பாசத்துடன் பேசிக் கொண்டனர். புன்னகைகளை பரிமாறிக் கொண்டனர்.

திருமணத்தில் நெகிழ்ச்சிப் பேச்சு
அதேபோல திருமணத்திற்கு கருணாநிதி தலைமை தாங்கி ராமதாஸை வாயார, இதயப்பூர்வமாக வாழ்த்தி உருக்கமாக பேசினார். பதிலுக்கு டாக்டர் ராமதாஸும் உருகி உருகி பேசினார்.

ஒரே விமானத்தில் பயணி்த்த ஸ்டாலின், வைகோ
மறுபக்கம் ஸ்டாலினும், வைகோவும் சென்னையிலிருந்து ஒரே விமானத்தில் மதுரைக்குப் பயணித்து மேலும் சூட்டைக் கூட்டினர்.

சேர்ந்தால் மகிழ்ச்சிதான்
இந்த சந்திப்புகள், பேச்சுக்கள் குறித்து கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன், திமுக செயற்குழு, பொதுக்குழுவும் அதை ஏற்கும் என்று பெரும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அடுத்த கல்யாணத்தில் மாறிய பேச்சு
ஆனால் நேற்று ஈரோட்டில் நடந்த கணேசமூர்த்தி இல்லத் திருமண விழாவில் கூட்டணி குறித்து சிந்திக்கவே இல்லை என்று கூறி விட்டார் வைகோ.

சேலத்தில் ராமதாஸின் அதிரடிப் பேச்சு
அதேசமயம், சேலம் வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸோ, 2016ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்றும் அரசியல் நாகரீகம் காரணமாகவே தமது பேத்தியின் திருமணத்திற்கு கட்சித் தலைவர்கள் வந்திருந்ததாவும் விளக்கம் அளித்துள்ளார்.

சுதாரிப்பாகி விட்டார் வைகோ
அதேசமயம், வைகோ முன்பு போல இல்லை. இதற்கு முன்பு பட்ட அனுபவத்தால் இப்போது அவர் சுதாரிப்பாக இருக்கிறார். தெளிவாகி விட்டார். இனிமேலும் ஏமாந்து போக அவர் தயார் இல்லை என்கிறார்கள். எனவேதான் அவர் எடுத்த எடுப்பிலேயே உஷாராக பேச ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள்.

ஏமாந்தது திமுகவா..!
திமுகவிடம் மீ்ண்டும் வைகோ ஏமாந்து விடக் கூடாது என்று மதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர். இதனால்தான் நேற்று ஈரோட்டில் கூட்டணி குறித்து சிந்திக்கவில்லை என்று வைகோ பேசியதாக கூறுகிறார்கள். அப்படியானால், வைகோ வருவார் என்று எதிர்பார்த்து திமுகதான் இப்போது ஏமாந்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது.

இதெல்லாம் டிரிக்ஸ் பாஸ்!
ஆனால் இப்படி பேசினால்தான் திமுக இறங்கி வரும், அடுத்த தேர்தலில் கூடுதல் சீட் தரும் என்பதற்காக பாமகவும், மதிமுகவும் இப்படி பேச ஆரம்பித்துள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
மொத்தத்தில் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் ஏற்பட்ட சந்தோஷம் தற்போது கரைந்து போயிருப்பதாக தெரிகிறது - குறைந்தது இப்போதைக்கு.












Click it and Unblock the Notifications