திமுக நேர்காணலின்போது கேட்கப்படும் 'சைடு' கேள்வி என்ன தெரியுமா...?
சென்னை: சென்னையில் நடந்து வரும் திமுக வேட்பாளர் நேர்காணலின்போது விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம், தேமுதிகவுடன் கூட்டணி சேரலாமா என்ற கேள்வியும் மறக்காமல் கேட்கப்பட்டு வருகிறதாம்.
நேர்காணலில் பங்கேற்கும் ஒவ்வொருவரிடமும் இந்தக் கேள்வி மறக்காமல் கேட்கப்பட்டு பதிவு செய்ய்படுகிறதாம்.
என்ன ஆச்சரியம்.. நேர்காணலில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் தேமுதிகவுடன் கூட்டணி சேரலாம் என்று பதிலளித்து வருகின்றனராம். இது திமுக தலைமைக்கே கூட ஆச்சரியமாக இருக்கிறதாம்.

தினசரி 4 தொகுதிகளில்
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடந்து வருகிறது. தினசரி நான்கு தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. காலையில் 2, மாலையில் 2. கருணாநிதி முன்னிலையில் நேர்காணல் நடத்துகிறார்கள்.

நேற்று நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி
நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. அவர்களிடம் செலவு எப்படி செய்வீர்கள், செல்வாக்கு என்ன, போராட்ட விவரம், கட்சிக்காக உழைத்தது உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டன.

யாருடன் சேரலாம்
பின்னர் விருப்ப மனுதாரர்களிடம் யாருடன் கூட்டணி சேரலாம், தேமுதிகவுடன் சேரலாமா என்பது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்குப் பெரும்பாலானவர்கள் தேமுதிகவுடன் சேர ஆதரவு தெரிவித்து விட்டு வந்தார்களாம்.

காங்கிரஸுக்கு சிலர் ஆதரவு
அதேசமயம், குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலர் காங்கிரஸுடன் சேர விருப்பம் தெரிவித்தனராம். பொதுவாக காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்தால் அப்போது சிறப்பான வெற்றிக்கு வாய்ப்புள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்தனராம்.

இன்று தேனி, திண்டுக்கல், மதுரை
இன்று காலை தேனி, திண்டுக்கல், மதுரை தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று சொன்னார்களாம்.

சேடப்பட்டிக்கு கிடைக்குமா திண்டுக்கல்
முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா திண்டுக்கல் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவர் நேர்காணலுக்கு வந்திருந்தார்.

இன்று மாலை விருதுநகர், ராமநாதபுரம்
இன்று மாலை விருதுநகர், ராமநாதபுரம் தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications