நெல்லை, தூத்துக்குடியில் வேட்புமனு தாக்கல் செய்த 2 கோடீஸ்வர திமுக வேட்பாளர்கள்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கியது. இந்நிலையில் அம்பை தொகுதி திமுக வேட்பாளர் ஆவுடையப்பன் சேரன்மகாதேவி சப் கலெக்டர் விஷ்ணுவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், அம்பை தொகுதியில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார். இது போல் ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சேக் முகைதீனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவில் தனக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 583 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.10 கோடியே 55 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு ஆலங்குளத்தில் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாப்பாக்குடி ஒன்றிய பகுதிகள் ஆலங்குளத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நெல்லை தொகுதியில் போட்டியிடும் ஏ.எல்.எஸ். லட்சுமணன் தொகுதி தேர்தல் அலுவலரும், ஆர்.டி.ஓ.வுமான பெர்மி வித்யாவிடம் தனது மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரின் கடுமையான உழைப்பு மற்றும் திமுகவின் சிறந்த தேர்தல் அறிக்கையால் நான் நெல்லை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளராக கீதா ஜீவன் களத்தில் உள்ளார். அவர் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு சப் கலெக்டர் அலுவலகம் சென்றார். தொடர்ந்து சப் கலெக்டரும், தொகுதி தேர்தல் அலுவலருமான கோபால சுந்தரராஜிடம் மனு தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து மாற்று வேட்பாளராக ராஜ்மோகன் செல்வின் என்பவரும் மனு தாக்கல் செய்தார்.
கீதா ஜீவன் தனது சொத்து மதிப்பை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் ரூ.4 லட்சத்து 81 ஆயிரத்து 598 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.1 கோடியே 7 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது கணவர் ஜேக்கப் ராஜேந்திரனின் பெயரில் ரூ. 26 லட்சத்து 52 ஆயிரத்து 632 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.6 கோடியே 11 லட்சத்து 98 ஆயிரத்து 785 மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். இது தவிர கீதா ஜீவனின் மகன் மகிழ்ஜான் பெயரில் ரூ.4.51 லட்சத்தில் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், மகள் ஜீனா ஏபி சுந்தரி பெயரில் சொத்துகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.